Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 12:47 PM
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், யார் யார் வேட்பாளர்? என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்த நிலையில், வருகிற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தலில் இருந்தே ஒதுங்கிக் கொள்ளும் சூழல் வந்த பின்னணியில் இருக்கும் பின்னணி என்ன?

டில்லி தலைமைக்கு பறந்த கடிதம்
கடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணியில் ஒவ்வொரு புள்ளியையும் இயக்கும் சக்தியாக, பவர் செண்டராக இருந்த அண்ணாமலை, இந்த தேர்தலில் சர்வ பலத்தையும் இழந்து தேர்தலில் இருந்தே ஒதுங்கிக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார் என்பது பாஜகவில் பரபரப்பை கிளப்பி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 27 தொகுதிகளுக்கும் யார் யார் வேட்பாளர் என்பது தொடர்பாக, சென்னையில் பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை புறக்கணித்துள்ளார். பாஜக மாநில தலைவர் பதவியை பறித்ததில் இருந்தே அதிருப்தியில் இருந்து வந்த அண்ணாமலை, சமீபத்தில் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இந்த சூழலில் வேட்பாளர்களை முடிவு செய்யும் ஆலோசனை கூட்டத்திலும்
அண்ணாமலை பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். அதோடு, வருகிற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என டெல்லி தலைமைக்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏமாற்றமே மிஞ்சியது
பாஜகவுக்கு அண்ணாமலை வந்த சில மாதங்களிலேயே மாநில தலைவர் பதவி தேடி வந்தது. திமுக அரசு மீது காட்டமான விமர்சனங்கள், பிரஸ் மீட், யாத்திரை, 2024 தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தது என தமிழ்நாடு பாஜகவில் தனி ஆவர்த்தனம் செய்து வந்த அண்ணாமலைக்கு, டெல்லி தலைமையும் கிரீன் சிக்னல் கொடுத்தது. ஆனால், 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பெரிதும் விரும்பிய டெல்லி தலைமை, அண்ணாமலையை ஒதுக்கி வைக்க முடிவு செய்தது. அண்ணாமலையிடம் இருந்து தலைவர் பதவியை பறித்து நயினாரிடம் கொடுத்தது. தலைவர் பதவி பறிக்கப்பட்ட பின்னர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிமுக மறுப்பு
இந்த நிலையில் தான், வருகிற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார் அண்ணாமலை. அதாவது, 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, 2024 தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடம் பிடித்தார். இந்த நிலையில், வருகிற தேர்தலில் கோவையில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதிகளில் போட்டியிட அண்ணாமலை விரும்பிய நிலையில், அந்த தொகுதிகளை ஒதுக்க அதிமுக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை கடும் அப்செட்
கோவையில், கோவை வடக்கு தொகுதி மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிக்கு ஏற்கனவே வானதி ஸ்ரீனிவாசன் ரிசர்வ் செய்து விட்டாராம். முன்பெல்லாம் கோவை பாஜகவின் முகமாக வானதி ஸ்ரீனிவாசன் மட்டுமே இருந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலுக்கு பிறகு அண்ணாமலைக்கும் செல்வாக்கு உயர தொடங்கியது. கோவையில் யார் கோலோச்சுவது என இருவருக்கும் இடையே பனிப்போர் வெடிக்க, அக்கா - தம்பி உறவுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கோவையில் அதிமுக கொடுத்த ஒரே ஒரு தொகுதிக்கும் வானதி துண்டு போட்டு வைத்து விட்டதால் அண்ணாமலை கடும் அப்செட் ஆகி விட்டார் என சொல்லப்படுகிறது.

அண்ணாமலை வருவாரா?
இது ஒரு பக்கம் இருக்க, தனது ஆதரவாளர்களுக்காவது சீட்டு வாங்கிக் கொடுக்கலாம் என்ற நினைப்பில் இருந்த அண்ணாமலைக்கு எதிராக நயினார் நாகேந்திரன் காய் நகர்த்தி வருவதாலும், ஆதரவாளர்களுக்கு ஏதுவான தொகுதிகளை அதிமுக ஒதுக்காததாலும் கடும் அதிருப்தியில் மூழ்கிய அண்ணாமலை, மீட்டிங்கை புறக்கணித்ததாக சொல்கிறார்கள். தமிழக பாஜகவில் முக்கிய இளைஞர் சக்தியாக பார்க்கப்பட்ட அண்ணா மலை, தேர்தல் களத்தில் தீயாக வேலை செய்வார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved