Also Watch
Read this
ஆளுநர் அர்லேக்கருடன் இரண்டாவது முறையாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து, தவெகவுக்கு ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை என, அமமுக எம்எல்ஏ காமராஜையும் உடன் அழைத்துச் சென்று விளக்கம் அளித்தார்.

108 இடங்களில் தவெக வெற்றி
சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
காங்கிரஸ் 5
இந்திய கம்யூனிஸ்ட் 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2
என தவெகவுக்கு ஆதரவு கடிதம் கிடைத்துள்ளது. இந்நிலையில், மே 8ஆம் தேதியும், ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
இந்த நிலையில், தவெக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார் டி.டி.வி.தினகரன். ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ள தங்கள் கட்சியின் எம்எல்ஏவான காமராஜ், அதிமுகவை ஆதரிப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் கடிதம் வழங்கினார். பின்னர், தங்கள் கட்சியின் எம்எல்ஏவை தன்னால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அவரை காணவில்லை என்றும், குதிரை பேரத்தில் தவெக ஈடுபட்டுள்ளதாகவும் டி.டி.வி. தினகரன் புகார் தெரிவித்தார்.

நள்ளிரவில் ஆளுநர் மாளிகைக்கு...
நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்தார் அமமுக எம்எல்ஏ காமராஜ். தொடர்ந்து டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார்.
எம்எல்ஏ காமராஜ் கூறியதாவது;
நான் புதுச்சேரியில் தங்கி இருந்தேன். எனது மொபைல் எண்ணுக்கு மாலை 6 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக இதுதொடர்பாக வழக்கறிஞரிடம் பேசி, என்ன செய்யலாம் என முடிவு செய்தோம். நான் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்தக் கடிதம் வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. நான் பயன்படுத்துவது வாட்ஸ்அப் வசதி இல்லாத போன். அதனால் எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இந்த விவரம் தெரிய வந்ததும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் வருகை தந்து விவரத்தை தெரிவித்தார். இவ்வாறு அமமுக எம்.எல்ஏ. காமராஜ் கூறினார்.

ராவணன், சீதையை கடத்தியது போல...
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதாவது;
உங்களிடம் ஆட்சி அமைப்பதற்கு தேவைப்படும் மெஜாரிட்டி இல்லை. நீங்கள் தூய சக்தி. தூய்மையான ஆட்சி கொடுக்க வந்துள்ளீர்கள். நீங்கள் ராவணன், சீதையை கடத்தியது போல மாற்று கட்சியினரிடம் ஆதரவு கோரி வருகிறீர்கள். அது சட்டப்படி சரியாகவே இருந்தாலும் இதன் பின்னணியில் குதிரை பேரம் நடைபெறவில்லை என எப்படி சொல்ல முடியும்? அப்படி உணர்வதில் ஆளுநர் மற்றும் பலர் எண்ணுவதில் என்ன தவறு உள்ளது? எங்கள் கட்சியின் எம்எல்ஏவின் பெயரில் ஆதரவு கடிதம் வந்துள்ளது. நல்ல வேளையாக ஆளுநர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்தக் கடிதத்தில் எங்கள் எம்எல்ஏவின் கையொப்பம் இருந்துள்ளது. அந்தக் கடிதத்தின் நகல் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல். அதைத்தான் தவெக தரப்பு ஆளுநரிடம் கொடுத்துள்ளது. இது போலித்தனம்.

ஆதரவின் பின்னணி என்ன?
தூய சக்தி என்ற பெயரில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் அசல் கடிதம் கேட்கவே அதை கொண்டு வருகிறோம் என சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆட்சி அமைக்கவே இப்படி மோசடி கடிதம் கொடுப்பவர்கள் நாளை ஆட்சி அமைத்த பிறகு என்ன செய்வார்கள்? இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளோம். இது குறித்து மீண்டும் ஆளுநருக்கு நாங்கள் தெளிவுப்படுத்த வேண்டும். எங்களிடம் ஒரே ஒரு எம்.எல்.ஏ. தான் உள்ளார். அவரை, எளிதாக குதிரை பேரம் மூலம் பெற்று விடலாம் என இப்படி செய்துள்ளார்கள். அவர்களின் ஆணவப் போக்கை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்கள் எம்எல்ஏவின் எதிர்காலம் என்னவாகும்? அவர்களுக்கு இதுவரை யார் யார் ஆதரவு கொடுத்துள்ளார்களோ அதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய வேண்டும்
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved