Also Watch
Read this
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 717 மதுபானக்கடைகளை இரண்டே வாரங்களில் இழுத்து மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பில் தமிழ்நாடு
டாஸ்மாக் கடைகளை மூடும் உத்தரவு, பலரது மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது. தான் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டும், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட உத்தரவிட்டும் விஜய் அதிரடி காட்டிய நிலையில் அடுத்து என்னென்ன உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார் என எதிர்பார்ப்பில் உள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.

177 மதுக்கடைகள் மூடல்
ஆட்சிக்கு வந்த உடனேயே அதிரடியாக 717 மதுபானக் கடைகளை இழுத்து மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு வருங்காலத்தில் மது இல்லாத மாநிலமாக மாறும் என்பதற்கு அச்சாரமாகவே பார்க்கின்றனர் இத்தனைகாலமும் மதுபோதையால் நிம்மதியை இழந்த பெண்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 4 ஆயிரத்து 829 மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், மாதம் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனையும் நடந்து வருகிறது.

பூரண மது விலக்கு போராட்டம்
கடந்த நிதி ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தத்தில் அரசுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் ஒரு துறை என்றால் அது டாஸ்மாக் தான். அரசுக்கு வருமானம் கொழிக்கும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு மதுபானங்களால் பல குடும்பங்கள் சீரழிகிறது என்பதையும் மறுக்க முடியாது.

மது குடித்து உயிரிழப்பது, போதையில் மனைவி பிள்ளைகளை அடிப்பது, குழந்தை குட்டிகளை சரவர கவனிக்காமல் இருப்பது என மதுவால் வரும் துன்பங்களை சொல்லி மாளாது. அதனாலேயே பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என பல போராட்டங்கள் நடந்ததோடு தற்போதுவரை கோரிக்கைகளும் தொடர்ந்து வருகிறது.

முதல்வர் விஜய் முதல் கையெழுத்து
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக்கழகம். இந்த ஆச்சரியத்தில் இருந்தே இன்னும் திராவிட கட்சிகள் மீளாத நிலையில் தான் முதலமைச்சராக பதவியேற்ற 2ஆவது நாளே 717 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோட சொல்லி உத்தரவு பிறப்பித்து தாய்மார்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார் விஜய்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் முதலில் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய். வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டம் என்று, இந்த மூன்றுக்கும்தான் முதல் கையெழுத்து.

மக்கள் மகிழ்ச்சி
அடுத்ததாக, மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் விவாதித்த முதலமைச்சர் விஜய், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூட ஆணையிட்டதோடு, அடுத்த இரண்டே வாரங்களில் இந்தக் கடைகள் மூடப்படும் எனவும் அறிவித்தார். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மதுபானக்கடைகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 48 ஆக குறையும்.

ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிரடியாக 717 மதுபானக் கடைகளுக்கு மூடுவிழா காண்பதே நல்லதொரு நடவடிக்கை தான் என்றும் படிப்படியாக ஒட்டுமொத்த மதுபானக் கடைகளுக்கும் பூட்டு போட்டால் பல குடும்பங்கள் ரோட்டுக்கு வராமல் இருக்கும் எனவும் மக்கள் கூறி வருகின்றனர்.

அடுத்து என்ன?
அதேபோல், பள்ளி செல்லும் மாணவிகள், கோவிலுக்கு செல்லும் பெண்கள் இனி எந்த பயமும் இன்றி பாதுகாப்புடன் சென்று வருவார்கள் எனவும் கூறும் மக்கள், குறைந்த அளவில் மூடுவிழா காணும் இந்த மதுபானக் கடைகளால் ஒரே நாளில் குடிமகன்கள் திருந்தாவிட்டாலும் குடிப்பழக்கம் ஓரளவுக்காவது குறையும் எனவும் கூறி வருகின்றனர். அதேபோல், முதலமைச்சர் விஜய் அடுத்து என்னென்ன அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவார் எனவும் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved