Also Watch
Read this
பொது மக்களின் எழுச்சியைப் பார்த்தால், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி தான் வெல்லும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தோல்வியின் விரக்தியில் எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகவும் சாடி உள்ளார்.

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருமயம் எஸ்.ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன், புதுக்கோட்டை முத்துராஜா, விராலிமலை கே.கே.செல்லபாண்டியன்,

கந்தர்வக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சின்னதுரை, அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து புதுக்கோட்டையில் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை, பிரச்சாரம் மேற்கொள்கிறார். தஞ்சாவூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை சிவபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.

நடைபயிற்சியோடு வாக்கு சேகரிப்பு
புதுக்கோட்டையில் நடைபயிற்சி மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் கடைவீதியில் கூடியிருந்த பொதுமக்களை சந்தித்து, திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். அங்கு வந்த தனியார் பேருந்திலும் ஏறி, பயணிகளிடம் வாக்கு சேகரித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

234 தொகுதிகளிலும் வெற்றி
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவும், சிறப்பாகவும் உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் தோல்வியின் உச்சத்துக்கு சென்றுவிட்டதால் விரக்தியில், தமிழக அரசு நிதி மேலாண்மையை முறையாகக் கையாளவில்லை என்று பேசி உள்ளார். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும், கூட்டத்தையும் பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.

வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்
பாஜகவில் இருந்து எத்தனை பேர் வந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர். இது போன்று எதை வேண்டுமானாலும் செய்யட்டும், இதற்கு மேலும் செய்வார்கள். அதைப் பற்றி நாங்கள் கலவைப்பட மாட்டோம். கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு அதிமுகவினர் அடிமையாகி விட்டனர். அதனால் அவர்களை டெல்லி தான் இயக்குகிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படிப் போனதை நினைத்து வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.

நடிகர் வந்தாலும் கவலையில்லை
நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். நடிகர் பின்னால் சென்று விபத்து நேரிடுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நடிகர் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved