Also Watch
Read this
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது என்று, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தமிழர் என்ற உணர்வு, வெட்கம், மானம் இருந்தால் பாஜகவை கண்டிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என கேள்வி எழுப்பியவர், திமுக ஆட்சியில் வழங்கப்படும் ஊக்கத்தொகையை முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று, மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுகவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.

தஞ்சாவூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில்
திருவையாறு வேட்பாளர் துரை சந்திரசேகரன்
தஞ்சை ராமநாதன்
ஒரத்தநாடு வைத்திலிங்கம்
பட்டுக்கோட்டை அண்ணாதுரை
பேராவூரணி அசோக்குமார்
திருவிடைமருதூர் கோவி.செழியன்
கும்பகோணம் அன்பழகன்
பாபநாசம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் ஷாஜகான் ஆகியோரை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது;

கம்பீரம் வருகிறது
யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர். தஞ்சாவூருக்கு வந்தாலே கம்பீரம் வருகிறது. திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. மே 4ல் திராவிட மாடல் 2.0 வெற்றியை அறுவடை செய்ய தயாரா?. காவிரித் தாயின் மண்ணுக்கு கலைஞரின் மகன் வந்திருக்கிறேன். தஞ்சை தரணிக்கு வந்தாலே இனம் புரியாத கம்பீரம் பிறக்கிறது. ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனுமே எனது கம்பீரத்திற்கு காரணம்.

நெல்லுக்கு ஊக்கத்தொகை
தஞ்சை மாவட்டத்தில் 2 இடங்களில் சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது. வரவே கூடாது என நினைத்து தடுத்த கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழகத்தை திராவிட மாடல் 2.0.வில் அமைத்தே தீருவேன். தமிழ்நாடு அரசு வழங்கக் கூடிய ஊக்கத் தொகையால் நெல் உற்பத்தி பெருகி வருகிறதாம்.

நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்று, ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. அவதூறுகள் பேசுவதற்கு மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி வாய் திறப்பாரா?. பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டு உள்ளன. அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிரதமர் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. அதிகாரிகளை எப்படி பந்தாடலாம் என்பதில் தான் ஒன்றிய பாஜக அரசின் முழு கவனமும் உள்ளது.

தொடர்ந்து 2வது முறை முதலமைச்சராக...
ஐந்து ஆண்டுகளில் ரூ.2,500 கோடிக்கு மேல் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு உள்ளது. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை என 2021ல் சொன்னோம், செய்து காட்டினோம். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 ரூபாய் ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்காக தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் குறித்த நேரத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டு உள்ளது. யோகத்தை நம்புபவன் அல்ல மு.க.ஸ்டாலின், உழைப்பை நம்புபவன். கலைஞரிடம் உழைப்பை கற்றுக் கொண்ட மாணவர் நான்,

திமுகவில் தொடர்ந்து 2வது முறை முதலமைச்சராக யாரும் ஆனதில்லை என்பதை உடைத்துக் காட்டுவேன்.
இவ்வாறு பேசி, மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved