Also Watch
Read this
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற விஜய், மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளுக்காகவும், திட்டங்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். நீட் எதிர்ப்பு, கோவை எய்ம்ஸ் திட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் பிரதமர் முன்னிலையில் அடுக்கி உள்ளார்.

டில்லியில் முதல்வர் விஜய்
தலைநகர் டெல்லியில், பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலமாக மட்டுமே 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

வளர்ந்த பாரதத்தில் தமிழ்நாட்டின் பங்கு
தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் பாதுகாப்பதோடு, மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை தொடர, தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாகவும் முதலமைச்சர் விஜய் கூறினார். 2036ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நோக்கில், அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவை கோரினார்.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, மேக கணினி தொழில்நுட்பம், மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வித் துறையில் முக்கிய கோரிக்கையாக, நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பதாகவும், மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

கோவையில் எய்ம்ஸ், மீனவர் நலன்...
அனைவருக்கும் வீடு திட்டத்திற்கான நிதி, கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் விடுதலை, கடலோர பேரிடர் மேலாண்மைக்கான கூடுதல் நிதி உள்ளிட்ட கோரிக்கைகளும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

குலசேகரப்பட்டினம் விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும் என்றும், கரூர் கோவை சாலை விரிவாக்கம், மாதவரம் சோழவரம் உயர்த்தப்பட்ட வழித்தடம், சென்னை - கன்னியாகுமரி அதிவேக ரயில் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய சாலை மற்றும் ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக...
மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்கான நிதி உதவி, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்கள் மற்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, சமக்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 3 ஆயிரத்து 284 கோடி ரூபாய் நிதியை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களின் சாதனைகளையும் முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved