Also Watch
Read this

உலகக்கோப்பை கால்பந்து முதலாவது ஆட்டத்தில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வாகை சூடியது.

கண்கவர் வாணவேடிக்கை, லேசர் காட்சிகள்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் இரவைப் பகலாக்கிய வாணவேடிக்கைகள், கண்களைக் கவர்ந்தன. கண்கவர் லேசர் காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழா மெக்சிகோவில் கோலாகலமாக தொடங்கியது. வண்ணமயமான வாணவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவை டிவி, இணையதளம் வாயிலாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடரை யுனைட் 8 ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. தொடர்ந்து, கனடா, அமெரிக்காவில் இன்று தொடக்க விழா நடைபெற உள்ளது.

சாம்பியன் அணிக்கு ரூ.476 கோடி பரிசுத்தொகை
பிஃபா கால்பந்து உலகக் கோப்பையில், வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 476 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 314 கோடி ரூபாயும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 86 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

மெக்சிகோ vs தென்னாப்ரிக்கா
2026 கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின், தொடக்கப் போட்டியில் தொடரை இணைந்து நடத்தும் மெக்சிகோ அணி, தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமான தொடக்கத்தைப் பதிவு செய்தது. இந்த தொடக்கப் போட்டியிலேயே சாதனையாக 3 ரெட் கார்டுகளை நடுவர்கள் கொடுத்ததும், பேசு பொருளானது.

48 அணிகள், முதல் போட்டி...
மெக்சிகோ நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புபெற்ற அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி, உலகக் கோப்பை வரலாற்றிலேயே 48 அணிகள் பங்கேற்கும் மிகப்பெரிய தொடரின் முதல் போட்டியாக அமைந்தது. 80 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், மெக்சிகோ அடி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கி ஒன்பது நிமிடங்களுக்குள் ஜூலியன் குயினோனஸ் அடித்த கோல் மூலம் மெக்சிகோ முன்னிலை பெற்றது. தென் ஆப்ரிக்க கோல்கீப்பர் ரோன்வென் வில்லியம்ஸின் கால்களுக்கு இடையே பந்தை செலுத்தி உலகக் கோப்பையின் முதல் கோலை அடித்தார்.

முதல் ரெட் கார்டு...
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்பெபெலோ யாயா சித்தோலே, கோல் அடிக்கும் வாய்ப்பில் இருந்த மெக்சிகோ வீரர் பிரையன் குட்டியெரஸை தடுப்பதற்காக கீழே தள்ளியதால் நேரடியாக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா மேலும் அழுத்தத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து அனுபவம் மிக்க மெக்சிகோ முன்னணி வீரர் ரவுல் ஜிமெனேஸ், இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் கோலுக்கு அருகில் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். சர்வதேசப் போட்டிகளில் ஜிமெனேஸ் அடிக்கும் 46ஆவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மெக்சிகோ அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் ஜாரெட் போர்கெட்டியுடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துள்ளார்.

ரெட் கார்டு... சிவப்பு அட்டை...
இந்த போட்டி முழுவதும் ஒழுங்கீன சம்பவம் இடம்பெற்றது.
* தென் ஆப்ரிக்காவின் தெம்பா ஸ்வானே, ரொபெர்டோ அல்வராடோவின் முகத்தில் தாக்கியதற்காக விஏஆர் பரிசீலனைக்குப் பிறகு சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதனால் தென்னாப்பிரிக்கா ஒன்பது வீரர்களுடன் மட்டுமே போட்டியை முடித்தது. உலகக் கோப்பை போட்டி ஒன்றில் ஒரே அணி இரண்டு ரெட் கார்டு பெற்றது 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை.
* கூடுதல் நேரத்தில் மெக்சிகோ வீரர் செசார் மொண்டெஸுக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால் உலகக் கோப்பை தொடர் தொடங்கிய முதல் போட்டியிலேயே மொத்தம் மூன்று ரெட் கார்டு வழங்கப்பட்டன.

மூன்று புள்ளிகளுடன்...
இந்த போட்டியின் மூலம் பெற்ற வெற்றியால், ஏ பிரிவில் மெக்சிகோ 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று உள்ளது. அடுத்ததாக ஜூன் 18ஆம் தேதி குவாடலஹாராவில் தென் கொரியாவை அந்த அணி எதிர்கொள்கிறது. அதே நாளில் தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் செக்கியா உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அறிமுக வீரராக இளம் வீரர்...
இந்த போட்டியில் 17 வயது 240 நாட்களே ஆன இளம் வீரர் கில்பெர்டோ மோராவை, மெக்சிகோ உலகக் கோப்பை அறிமுக வீரராக களம் இறக்கியது. இதன்மூலம் உலகக் கோப்பையில் விளையாடிய இளம் மெக்சிகோ வீரராகவும், போட்டி வரலாற்றில் ஆறாவது இளம் வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved