Also Watch
Read this
H-1B விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்திருந்த கட்டண உயர்வை ரத்து செய்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயல் என நீதிபதி கருத்து கூறி உத்தரவிட்ட நிலையில், இந்தியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

விசாக்களுக்கு கட்டண உயர்வு
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக, எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்களான ஐ.டி. துறையில், திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுகிறது. குலுக்கல் முறையில் இந்த விசா புதிய விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையில் மாற்றம் அறிவிக்கப்பட்டது. ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த எச்-1பி விசா கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த விசாவை பெறுபவர்களில் பெரும்பாலானவர்களான இந்தியர்கள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

20 மாகாணங்களில் வழக்கு
இந்த சூழலில், எச்-1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவின் 20 மாகாண அரசு சார்பில், மாசச்சூசெட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது பல்வேறு வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது;

அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதனை, இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்து உள்ளது. இதனால், இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்ட விரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது. மேலும், இந்த அறிவிப்பு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் 38% குறைவு
அமெரிக்காவில், எச்-1பி விசா கட்டண உயர்வால், அதற்கான விண்ணப்பங்கள் தற்போது குறைந்தது. கடந்த பிப்ரவரி மாத தகவலின்படி, எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்1பி விசா கேட்டு விண்ணப்பித்தனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் குறைந்தது. இந்தச் சூழலில் இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்து உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்யும் என கூறப்படுகிறது.