Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 08:43 AM
சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, மின் அடுப்பை பயன்படுத்தும் உணவகங்களுக்கு மானியம் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கத்தை விட கூடுதல் மின்சாரத்தை பயன்படுத்தினால் யூனிட் ஒன்றுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
முதல்வர் அவசர ஆலோசனை
தமிழகத்தில், வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, உணவகங்கள் மற்றும் டீக்கடை உரிமையாளர்களுக்கு உதவும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது;
எரிவாயு தட்டுப்பாட்டின் காரணமாக, பல உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் மாற்று வழிகளாக மின் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளன. இதனால் ஏற்படும் கூடுதல் மின் சுமை மற்றும் செலவை ஈடுகட்டும் வகையில், வணிக நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.
மின் அடுப்பு பயன்பாடு, ரூ.2 மானியம்
மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு, மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டிற்கு ரூ.2 வீதம் மானியம் அளிக்கப்படும். இந்த சலுகை, மத்திய அரசு வணிக எரிவாயு விநியோகத்தின் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கும் காலம் வரை அமலில் இருக்கும். எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய மின் சாதனங்களை வாங்க விரும்பும் சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு அரசு சலுகைகளை வழங்குகிறது. மின்சார சமையல் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.3.05 லட்சம் வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. இதில், 25 சதவீத மானியம் உண்டு. மின் பயன்பாடு அதிகரித்தாலும், அது வழக்கமான மின் பயன்பாட்டுக் கணக்கீட்டின் அடிப்படையில் பார்க்கப்படாது. வணிக நிறுவனங்கள் பயமின்றி மின் அடுப்புகளைப் பயன்படுத்த இது வழிவகுக்கும்.
முன் எச்சரிக்கை நடவடிக்கை
மாநிலம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அவசர தேவைகளை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன் அனுமதியின்றி சுமார் 60,698 தொழிற்சாலைகள் மாற்று எரிவாயுவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தட்டுப்பாட்டை சமாளிக்க, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 3,228 லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படும்.
தொடர் ஆலோசனை
காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய, மாநிலத்திலுள்ள 194 உழவர் சந்தைகளில் அனைத்து வசதிகளும் சீராக செயல்படுவதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான நிலவரத்தை மாநில அரசு தினமும் கூர்ந்து கவனித்து வருகிறது. தட்டுப்பாட்டைச் சீர்செய்ய தொழில் துறை அமைப்புகள், வணிகர் சங்கங்கள், எரிவாயு விநியோக நிறுவனங்களுடன் தொடர் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved