Also Watch
Read this
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எளிதில் வீழ்த்தி, பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி பந்தில் சிக்சர் அடித்து விராட் கோலி அணியை வெற்றி பெற வைத்த நிலையில், இந்த போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் மற்றும் வீரர்கள் படைத்த சாதனைகள் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு.

தொடர்ந்து 2ஆவது முறை
ஒரு முறையாவது கோப்பையை வென்று விட மாட்டோமா? என ஏங்கிக் கிடந்த காலம் மாறி, தற்போது தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்று அதிரடி காட்டியிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

பெங்களூரு Vs குஜராத்
நடப்பு சாம்பியனான பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் பேட்ஸ் மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தனர். 2ஆவது பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகிய இருவரும் இந்த போட்டியில் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தனர். கில் 10 ரன்களிலும், சுதர்சன் 12 ரன்களிலும் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் 19 ரன்களிலும் அவுட் ஆகி, வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். கடைசி வரை போராடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனால் அணியின் ஸ்கோரும் மெல்ல மெல்ல உயர்ந்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

வந்தார் விராட் கோலி
156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூரு அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நிலைமையை உணர்ந்து நிதானமாக விளையாடி வந்த நிலையில், 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார் வெங்கடேஷ் ஐயர். தொடர்ந்து களமிறங்கிய படிக்கல், கேப்டன் பட்டிதார் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தாலும் மறுபுறம் விராட் கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கடைசி பந்தில் சிக்சர்
அரை சதம் அடித்த பின்னும் களத்தில் இருந்த அவர், சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனியை போல கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 18 ஓவர்கள் முடிவில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

25 பந்துகளில்...
இறுதிப்போட்டி என சொல்லும் அளவுக்கு போட்டி விறுவிறுப்பாக இல்லாவிட்டாலும் அணியாகவும் தனியாகவும் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்தனர். குறிப்பாக, ஐபிஎல்லில் தனது அதிவேக அரை சதத்தை இந்த போட்டியில் விராட் கோலி பதிவு செய்தார். கடந்த 2018ஆம் ஆண்டில் 26 பந்துகளில் அரை சதம் அடித்ததே அவரின் அதிவேக அரை சதமாக இருந்த நிலையில் இந்த போட்டியில் 25 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார்.

2ஆவது இந்திய வீரர்
இதேபோல், தொடர்ச்சியாக 4 ஆண்டுகள் 600 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி படைத்தார். அதுமட்டுமின்றி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதாரும் ஒரு புதிய சரித்திரத்தை படைத்தார். கேப்டனாக அறிமுகமாகி தொடர்ச்சியாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்த ஒரே வீரர் ரஜத் பட்டிதார் மட்டுமே. அதேபோல் விராட் கோலிக்கு பிறகு, ஒரே ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 500 ரன்களுக்கு மேல் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாதனை
பேட்ஸ்மேன்களை போல பவுலர்களும் பல்வேறு சாதனைகளை படைத்தனர். அதாவது நடப்பு சீசனில் பவர் பிளேவில் மட்டும் 17 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் முகமது ஷமியின் வாழ்நாள் சாதனையை ஆர்சிபி வீரர் புவனேஷ்வர் குமார் சமன் செய்து அதிரடி காட்டியுள்ளார். மிக முக்கியமாக, தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்ற அணிகளின் பட்டியலில் சென்னை, மும்பையை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இணைந்து தாங்களும் ஓஜி அணி தான் என்பதை நிரூபித்து காட்டியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

இரவு முழுவதும் கொண்டாட்டம்
பல்வேறு சாதனைகளுடன் ஆர்சிபி அணி மீண்டும் வெற்றி மகுடம் சூடியதை பெங்களூரு ரசிகர்கள் இரவு முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த ஆண்டு நடந்த துயர சம்பவத்தால் பெங்களூரு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், உற்சாக மிகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடி தீர்த்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved