Also Watch
Read this
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளை ஒட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி எம்பி, ஓபிஎஸ் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்களும் மலர் வணக்கம் செலுத்தினர்.
மெரினா கடற்கரையில்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எம்பி கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம் மற்றும் முரசொலி நாளிதழ் வளாகங்களில் உள்ள கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அன்பகத்தில் உள்ள 75 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து சிறப்பித்தார். தொடர்ந்து தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் சிலைகளையும் திறந்து வைத்தார்.

’மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்’
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து பதிவிட்டுள்ளார். மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னத தலைவர் கலைஞர் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். வெற்றியை தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல் சோதனை கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது என குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம் என்றும், தமிழ்நாட்டை சூழ்ந்து வரும் இருளை உதயசூரியனின் ஒளியால் விரட்டியடிப்போம் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.

பணி தொடர உறுதியேற்போம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து தனது X தளத்தில், "தந்தை பெரியாரின் வழியில் சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த கலைஞரின் புகழ் போற்றுவோம்" என பதிவிட்டுள்ளார். கலைஞரின் பிறந்த நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் வானில் ஏது மறைவு
திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் பெருமைகளை கூறும் வகையில் ஏஐ வீடியோ வெளியிட்டுள்ள கனிமொழி, தெற்கில் இருந்து உதித்த திராவிட பெருஞ்சூரியன் அவர் எனவும், தலைமுறைகள் தலைநிமிர ஓய்வின்றி உழைத்த அந்த சூரியனுக்கு தமிழ் வானில் ஏது மறைவு என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved