Also Watch
Read this
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தார். கர்நாடகத்தின் திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வதை ஏற்க முடியாது என முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக கூறி உள்ளார். கட்சி வேறுபாடுகளை தள்ளி வைத்துவிட்டு அனைவரும் தமிழ்நாட்டிற்காக ஓரணியில் நிற்போம் என கேட்டுக் கொள்வதாகவும் வேண்டுகோள் விடுத்தார்.

தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்
இது தொடர்பாக, முதல்வர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தில் கூறி இருப்பதாவது;
காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

அனுமதி தரக்கூடாது
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும் படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து விட்டதால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை.

சட்டப்பேரவை வலியுறுத்தல்
கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

உணர்வுப்பூர்வ பிரச்சினை
கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்னையாக இருக்கிற காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும். அரசியல் என்பதும் அரசியல் கட்சிகள் என்பதும் மக்களுக்கானதாக தான் செயல்பட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தீர்மானத்தை முன் மொழிந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved