Also Watch
Read this
By: Web Team

சுரங்கத் திட்டங்களுக்கு பொது மக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது;
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அலுவலகக் குறிப்பாணையின் மீது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அனைத்து சுரங்கத் திட்டங்களும், பொது மக்கள் கருத்துக் கேட்பின் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றும், சம்பந்தப்பட்ட குத்தகைப் பகுதியின் அளவைக் கருத்தில் கொள்ளாமல், ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக கடலோர மாவட்டங்கள், கடற்கரை மணல் அமைப்புகளில் படிந்துள்ள அரிய மண் கனிம கூறுகளின் படிவுகளைக் கொண்டுள்ளன. இந்த கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. மன்னார் வளைகுடா மற்றும் பாக். விரிகுடாவின் மணல் கடற்கரைகள் அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளன, இவை கடலரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிராக இயற்கைக் கேடயங்களாகச் செயல்படுகின்றன.
இத்தகைய பகுதிகளில், சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்டது. எனவே, உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன் கடுமையான ஆய்வு தேவைப்படுகிறது.
இந்நிலையில், ஒன்றிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணை, கடுமையான சட்டரீதியான கவலைகளை எழுப்புகிறது.
பொது மக்கள் கருத்துக் கேட்பிற்கு வழிவகுக்காமல், அனுமதிக்க முடியாத நிர்வாக சட்ட திருத்தத்திற்கு சமமாக உள்ளது. எனவே இது நிலைக்கத்தக்கதல்ல.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். மாநில அரசுகள் மற்றும் பொதுமக்களின் உரிய ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும்.
மேற்கூறிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள், கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி நெறிமுறைகளுக்கும் எதிரானதாக அமையும்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, 08.09.2025 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த காலங்களில் எப்போதும் செய்யப்பட்டது போல, நாட்டின் முன்னேற்றத்திற்கு மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு பங்களிப்பதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இத்தருணத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved