Also Watch
Read this
தவெக அரசுக்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லை என்று சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 65 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது வாக்களித்த மக்களுக்கே, கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார்.

தனிப் பெரும்பான்மை இல்லை
தமிழக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
ஆளுங்கட்சி 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் பெற்றது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்தனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட தவெக ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நம்பிக்கையின்றி முதல்வர் விஜய் 2 இடங்களில் போட்டியிட்டார். 2 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்தார். தொகுதி மக்களுக்கு இதுவரை ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு
திமுக தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைத்து இருக்கிறது. ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து உள்ளனர். இப்போதும் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அவர்கள் கூறி உள்ளனர். உங்கள் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் போட்டியிட்ட எம்எல்ஏவை, அந்தக் கட்சித் தலைவருக்கே தெரியாமல் ஆதரவு தர வைத்து விட்டீர்கள்.

புஷ்பா பட பாணியில்...
அதிமுக 2 அணியாக பிளவுபட்டு உள்ளது. ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அந்தப் பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே, புதிய முதல்வரும் செல்கிறார். ‘புஷ்பா’ பட பாணியில் தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் சிலரிடம் இருந்து எம்எல்ஏக்களை கடன் பெற்று, ஆட்சி நடத்துகிற முதல்வர், தான் கொடுத்த போலி வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்த உடனே, திமுக அரசு வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் குறித்து தவறான தகவலை கொடுத்து திசை திருப்ப பார்க்கிறார்.

எத்தனை நாட்களுக்கு...
பெரும்பான்மை இல்லாத இந்த அரசு மக்களுக்கு நல்லாட்சி தரும் என்ற நம்பிக்கை இல்லை. இந்திய வரலாற்றிலேயே கட்சி தாவுவதற்கு முன்னதாகவே, அந்தக் குழுவின் தலைவர் வீட்டுக்குச் சென்று அவருக்கு அழைப்பு கொடுத்ததை யாரும் பார்த்ததில்லை. CHANGE, CHANGE என்று சொன்னீர்களே, அதற்கு பின்னால் EXCHANGE இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். கூவத்தூரையே மிஞ்சும் அளவிற்கு நீங்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, இந்த அரசு எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறதோ? என்ற சந்தேகம், மக்களுக்கு வந்து விட்டது.

ரியல் ஆட்சியாக நடத்துங்கள்
நடப்பதையெல்லாம் பார்த்து, 'பெரிய தவறை செய்துவிட்டோமோ' என வாக்களித்த மக்களே நினைக்கத் தொடங்கி உள்ளனர். இதை பிரதிபலிக்கும் வகையில் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம். மகளிர் உரிமை தொகை, குழந்தைகள் காலை உணவுத் திட்டத்துக்காக காத்திருக்கிறார்கள். நீங்கள் அவகாசம் கேட்டீர்கள். எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், காத்திருப்பவர்களை ரொம்ப காலம் காத்திருக்க வைத்து விடாதீர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். மக்கள் கேட்பதும் இதைத் தான்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved