Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 04:57 AM
நடிகர் ரஜினிகாந்த் குறித்து, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அவதூறு கருத்துகளை பேசியது அநாகரிகமானது என்று, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அரசியலுக்கு வருவது எப்படி தனி மனித உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் உரிமை தான் என்றும் பதிவிட்டுள்ளார்.
எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து, த.வெ.க. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்கு உரியது. அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த்.
தனி மனித உரிமை
புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனி மனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர் தம் உரிமை.
அரசியல் நாகரிகமற்ற செயல்
அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.
இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved