Also Watch
Read this
By: Web Team

ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புகளுக்கு, தம்மால் திரைக்கதை எழுத முடியவில்லை என்று கூறிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
’கூலி’ திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு, பொதுவெளியில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பேசியதாவது:
என் படம் குறித்து எதுவுமே இதுவரை நான் சொன்னதில்லை. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு தான் என்னை இந்த இடத்தில் வைத்துள்ளது. என்னை மட்டுமில்லை எல்லா கலைஞர்களையும் அதுதான் ஒரு இடத்தில் வைத்துள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு இல்லை என்றால், கதை பண்ண முடியாது. அதே நேரத்தில், அந்த எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது.
‘கூலி’ திரைப்படத்தில் கூட, இந்த படம் டைம் டிராவல், எல்சியு-வில் வருகிறது என நான் சொல்லவில்லை. ரசிகர்களே யூகித்து, கூறிக்கொண்டார்கள்.

படத்திற்கு ’டிரெய்லர்’ கூட வெளியிடவில்லை. 18 மாதம் படத்தை எந்தளவிற்கு மறைத்து வைக்க முடியுமோ அந்தளவிற்கு மறைத்து வைத்திருந்தேன். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மறைத்து வைக்க முடியாது. எல்லா நாளும் ரஜினி படம், லோகேஷ் படம் என பேசிக்கொண்டே இருந்தார்கள். அதை தடுக்கவே முடியாது.
அதற்காக, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக நான் கதை எழுத முடியாது. ஒரு வேளை நான் எழுதிய கதை அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் அது நல்லது. அப்படி பூர்த்தி செய்யாவிட்டால், அதை பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்.
வெற்றி என்பது கோடிக்கணக்கில் ஒரு படம் வசூல் செய்வது கிடையாது. ஒரு திரைப்படத்தை எடுத்து ரசிகர்களிடம் காண்பித்துவிட்டாலே, ஒரு இயக்குனராக வெற்றி பெற்று விட்டதாக அர்த்தம்.
’பாக்ஸ் ஆஃபிஸ்’ என்பது தயாரிப்பாளர்களுக்கானது. ஒரு இயக்குனராக, கதை சொல்ல வந்தேன், அதை ரசிகர்களிடம் காட்டுகிறேன், அவ்வளவு தான்.
யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம். அதில் நாம் எவ்வளவு உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசி உள்ளார்.