Also Watch
Read this
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் கொந்தளித்ததால் மைக் பிடுங்கப்பட்ட சூழலில், செய்தியாளர் சந்திப்பில் சனம் ஷெட்டி மனக்குமுறலை கொட்டித்தீர்த்தார்.

கூட்டத்தில் சனம்ஷெட்டி
இது, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமா அல்லது ஜனநாயகன் படத்துக்கு எதிரான போராட்டமா என குழம்பும் அளவுக்கு, முதலமைச்சர் விஜய் மீதும் தவெக மீதும் விமர்சனங்களை அள்ளித்தெளித்த கூட்டத்தில் புகுந்து ஆட்டத்தை கலைக்க பார்த்த சனம் ஷெட்டியின் விபரீத பேச்சு பேசுபொருளாகி உள்ளது.

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு
சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவே இந்த போராட்டம் கட்டமைக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ள சூழலில், நடிகை சனம் ஷெட்டி நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாலன் இல்லத்தில் முகாமிட்டார்.

ஜனநாயகன் படம் பார்த்தேன்...
இயக்குநர் வெற்றி மாறன், நாதக நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்டோருக்கு முன்னிலையில் மைக்கை பிடித்த சனம் ஷெட்டி, “இது மாணவர்களின் போராட்டம். இந்த போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் கோமாளி, நாங்கள் கிடையாது," என சீறினார்.

அதோடு, தாம் தளபதியுடைய தீவிரமான ஃபேன் என்ற சனம், நேற்று தான் FDFS ஜனநாயகன் படம் பார்த்துவிட்டு வந்திருப்பதாக சொன்னதும் அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மைக் பறிக்கப்பட்டு...
இதனை தொடர்ந்து சனம் ஷெட்டி, “நான் பேசவா? இல்லை போகவா?” என்று கேட்டதும் ஒட்டுமொத்த மாணவர்களும் கோரசாக போகலாம் என்றதால் ஆத்திரத்துடன் நின்ற அவரிடம் இருந்து மைக் வாங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். இதையனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த வெற்றிமாறனோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்தார்.

சனம்ஷெட்டியின் பேச்சு வைரல்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, "ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தவர்களை எப்படி ஜோக்கர் என்று சொல்லலாம். இவர்கள் தான் ஜோக்கர் நாங்கள் அல்ல" என பொங்கினார். அதோடு, மாணவர்கள் மேடையை அரசியல் அஜண்டாவுக்காக பயன்படுத்தப்படுவதை எற்கமுடியாது என்றார்.

விஜய் சார் மிஸ்ஸிங் என போஸ்டர் வைத்துக் கொண்டு போராடுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றவர், ’அவர் என்ன என் வீட்டிலா வந்து உட்கார்ந்துட்டு இருக்கிறாரு’ என கேள்வி எழுப்பினார்.

சனம் ஷெட்டியின் இந்த பேச்சு எக்ஸ் தளத்தில் வைரலாகி பெரும் விவாதத்தையே கிளப்பியிருக்கிறது.