Also Watch
Read this

அமெரிக்க- ஈரான் மோதலுக்கு மத்தியில் ஈரானியக் கடல் பகுதியில் 28 இந்தியக் கப்பல் பணியாளர்களுடன் சென்ற LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தப்பிய இந்திய பணியாளர்கள்
இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அனைத்து இந்தியப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளுடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்
வடமேற்கு பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 12 ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் பலியாகினர். தீவிரவாதிகள், வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை பாதுகாப்பு சோதனைச் சாவடியின் சுவரில் மோதி வெடிக்க செய்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதற்குப் பதிலடியாக 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த கொடூரத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் எனப்படும் உள்ளூர் தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வங்கதேச அதிபர் முகமது சகாபுதின் திடீர் ராஜினாமா
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் வங்கதேசத்தின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட முகமது சகாபுதின், பதவி முழுமை பெறும் முன்பே திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்பட்ட அவர் அண்மையில் ஹசீனாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக சகாபுதினுக்கு நெருக்கடி தரப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தரப்பட்ட அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும் வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முகமது சகாபுதின் ராஜினாமாவை தொடர்ந்து, அவருக்கு பதிலாக இடைக்கால அதிபராக நடாளுமன்ற சபாநாயகர் ஹபீஸ் உதின் அகமது செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.