Also Watch
Read this
இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். அரசியலில் இனி தலையிடுவதில்லை என்றும் 88ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விழாவில் கூறி உள்ளார்.

ராமதாஸ் 88ஆவது பிறந்த நாள்
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது 88ஆவது பிறந்தநாளை, விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி மற்றும் பாமக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு மேடையில் பேசிய ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ராமதாஸ் கூறியதாவது;
இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால் அரசியலை பேச மாட்டேன். அரசியலில் எதையும் வலியுறுத்த மாட்டேன். வருபவர்களை பார்ப்பேன், நலம் விசாரிப்பேன் அவ்வளவு தான். யார் வேண்டுமானாலும் என்னை வந்து பார்க்கலாம், நலம் விசாரிக்கலாம். அந்த வகையில் அரசியலில் தலையிட மாட்டேன். அன்புமணி பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு ராமதாஸ் கூறி உள்ளார்.

தேர்தலுக்கு முன்னர்...
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர், பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே அரசியல் முரண் ஏற்பட்டது. குறிப்பாக, இளைஞர் அணி நிர்வாகி நியமனத்தில், மேடையிலேயே தந்தை, மகன் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரு தரப்பிலும் மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தேர்தல் முடிவுக்கு பிறகு...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக உடன் கூட்டணி வைத்த பாமக தலைவர் அன்புமணி, ராஜ்யசபா எம்பி ஆனார். அவரது மனைவி சவுமியா அன்புமணி, தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி தந்தை ராமதாஸை சந்தித்திருந்த நிலையில், மனக்கசப்பு விலகி, சுமூக உறவு தொடர்ந்தது. இந்த நிலையில் ராமதாஸ், தனது 88ஆவது பிறந்த நாளான இன்று, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.