Also Watch
Read this
இளைஞர்களை தற்குறி என்று சொல்லும் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
கருத்துக் கணிப்பில் வெற்றி
இதுதொடர்பாக, திருமாவளவன் கூறியதாவது;
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று கணித்து உள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் கணித்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் இதற்கு நேர்மாறான கருத்துக்களை கூறி உள்ளன. நாங்கள் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்து இருக்கிறோம். அதன் அடிப்படையில் மக்களின் ஏகோபித்த ஆதரவு மதசார்பற்ற கூட்டணிக்கு தான். எனவே எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

உட்கட்சி விவகாரம்
ஓரிரு தொகுதிகளில், அதாவது சில இடங்களில் உட்கட்சி பிரச்சினை காரணமாக வேலை செய்யவில்லை என்று மட்டும் தான் சொல்லியிருந்தேன். ஆனால், எல்லாரும் இதனை திரித்து கூறுகின்றனர். திமுக கூட்டணியில் இருந்து விசிகவை வெளியேற்ற நினைத்து ஒரு கூட்டம் வேலை செய்து வருகிறது. அவர்களது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. அவர்களின் கனவு பலிக்காது. அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பலிகடா ஆகாது.

தவெக வெற்றி, பின்னணி, சூதாட்டம்
வட இந்திய மாநிலங்களை சேர்ந்த ஒரு சில நிறுவனங்கள் தான் விஜய் கட்சி வெற்றி பெறும் என சொல்லியிருக்கிறது. விஜய் பெயரில் ஏராளமான சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த சூதாட்ட கும்பல் பரப்பும் வதந்தி தான் இது. தேர்தலுக்கு முன்பு இப்படித்தான் திமுகவை முன் வைத்து சூதாட்டத்தை நடத்தினர். அகில இந்திய அளவில் இது நடைபெறுகிறது. இப்போது தேர்தல் நடந்து முடிந்த பிறகு விஜய்யை வைத்து சூதாட்டத்தை நடத்துகிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் ஏமாந்து போவார்கள்.

தற்குறி - உடன்பாடு இல்லை
இளைஞர்களை தற்குறி என்று சொல்லும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்களை எப்போதும் நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. நமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அவர்கள் நம்முடைய மக்கள். அவர்களை உரிய முறையில் மதிக்க வேண்டும் என்பது எனது கருத்து. விசிக எப்போதும் இப்படி பேசியதில்லை. இந்த சொல்லாடலை நாங்கள் ஒருபோதும் கையாண்டதில்லை.
இளைஞர்கள் மன நிலை
நூறு சதவீதம் இளைஞர்கள் விஜய் பின்னாடி போனது போன்று கட்டமைக்கப்படுகிறது. சோஷியல் மீடியாக்கள் முன்பு எல்லாம் கிடையாது. ஆனால், இப்போது சோஷியல் மீடியாக்களில் இப்படி ஒன்று பரவுகிறது. எல்லாரும் நடிகர் பின்னாடி இருக்கிறார்கள் என்றால், இல்லை. விஜய்க்கு வாக்களிக்காத இளைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் அதனை யாரும் பேசுவதில்லை. அரசியல் புரிதல் உள்ள பல இளைஞர்கள் உள்ளனர், அவர்களை பற்றி பேசுவதில்லை.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved