Also Watch
Read this
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் பழங்கள் விற்கும் மூதாட்டியிடம் குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் டம்மி 500 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றிய கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலி நோட்டை கொடுத்து 150 ரூபாய்க்கு மாம்பழம் வாங்கியதுடன், மீதித் தொகையான 350 ரூபாயையும் மூதாட்டியிடம் இருந்து வாங்கி கொண்டு எஸ்கேப் ஆன பெண்ணை, சிறைக்கு செல்வதில் இருந்து காப்பாற்றிய மூதாட்டியின் பெருந்தன்மை பேசு பொருளாகி உள்ளது.

பழ வியாபாரம் செய்யும் மூதாட்டி
வள்ளுவர் பெருந்தகையின் வாக்கிற்கு இணங்க, தம்மிடம் மோசடி செய்த பெண்ணை வெட்கி தலைகுனிய வைத்த மூதாட்டி.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தை சேர்ந்த 67 வயதான மூதாட்டி ஜெயலட்சுமி. இவர், சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் சீசனுக்கு ஏற்றார் போல் பழம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் மூதாட்டியிடம் 150 ரூபாய்க்கு மாம்பழங்களை வாங்கி கொண்டு, மீதி தொகையான 350 ரூபாயையும் மூதாட்டியிடம் இருந்து வாங்கி கொண்டு சென்றிருக்கிறார்.

குழந்தைகள் விளையாடும் டம்மி ரூ.500
சிறிது நேரம் கழித்து 500 ரூபாய் நோட்டை பிரித்து பார்த்து சந்தேகப்பட்ட மூதாட்டி, அதனை அருகில் இருந்த சக வியாபாரியிடம் காட்டியபோது அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில், அந்த பெண் கொடுத்துச் சென்ற 500 ரூபாய் நோட்டு குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் டம்மி ரூபாய் நோட்டு அது. நோயுடன் போராடி கொண்டிருக்கும் ஜெயலட்சுமி, மருந்து மாத்திரை வாங்குவதற்காக பழ வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், இப்படி ஒரு பெண் தம்மை ஏமாற்றி விட்டாளே, எனச் சொல்லி அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சின்னத்திரை நடிகர் பாலா உள்பட பலரும் உதவி
மூதாட்டியின் வீடியோ பார்த்து, நல்ல மனம் படைத்த பலர், அவரிடம் பழங்களை வாங்கி வியாபாரத்திற்கு சப்போர்ட் செய்ததுடன், சின்னத்திரை நடிகர் பாலா உள்ளிட்ட பலரும் மூதாட்டியின் மருத்துவச் செலவுக்கு பொருள் உதவியும், பண உதவியும் செய்தனர். இதற்கிடையில், மூதாட்டியை ஏமாற்றியது எர்ணாவூர் பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் என சிசிடிவி காட்சி அடிப்படையில் திருவொற்றியூர் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அப்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்திய நிலையில், தகவலறிந்து போலீஸ் நிலையத்திற்கு சென்றிருக்கிறார் மூதாட்டி ஜெயலட்சுமி.

பழம் விற்கும் மூதாட்டியின் பெருந்தன்மை
மோசடி செய்த பெண்ணை பார்த்ததும், தம் மகள் போல இருப்பதால் அவரை தண்டிக்க வேண்டாம், மன்னித்து விட்டு விடுங்கள் என்று போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மூதாட்டி ஜெயலட்சுமி. அவரது வேண்டுகோளை ஏற்று, பாக்கியலட்சுமியை ஸ்டேஷன் ஜாமீனில் போலீசார் விடுவித்த நிலையில், சிறைவாசத்தில் இருந்து தப்பிய பாக்கியலட்சுமி தமது தவறை உணர்ந்து, மூதாட்டி ஜெயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved