Also Watch
Read this
எம்பிபிஎஸ், BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டு உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை
இளநிலை மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் சுமார் 5,500 மையங்களில் இன்று, மே 3ஆம் தேதி நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புகளிலும் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 22 லட்சம் மாணவ, மாணவிகள், இந்த தேர்வை எழுதுகின்றனர். நீட் தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் வெளியிட தேசியத் தேர்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்பு, ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இந்த தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை - என்டிஏ ஆண்டுதோறும் நடத்துகிறது. 2026-27ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

5,500 மையங்களில் தேர்வு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்கள், நாடு முழுவதும் 552 நகரங்கள் மற்றும் துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூர் என வெளிநாடுகளில் 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 5,500 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 9.47 லட்சம் மாணவர்கள், 13.33 லட்சம் மாணவிகள் என மொத்தம் 22.80 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அதில் 180 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒரு தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வர்கள் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 1.30 மணிக்குப் பிறகு வந்தால் அனுமதி இல்லை என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved