Also Watch
Read this
சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு ஓய்ந்து வாக்கு எண்ணிக்கை மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் சூழலில், விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரின் பணிகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதோடு தாம் போட்டியிலிருந்து விலகியது, ஷாநவாஸ், பாலாஜி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது போன்ற பல விவகாரங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்த பின்பும்...
தேர்தல் முடிந்த பின்பும் கூட விசிக தலைவர் திருமாவளவனின் மன வேதனைகள் இன்னும் தீரவில்லை என்பதை தான் அவரது வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
டெல்லி அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு திரும்பும் ஆசையில் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியை டிக் செய்திருந்த நிலையில், திடீரென அதிலிருந்து பின்வாங்கி காங்கிரஸ் கட்சியில் இருந்து கடன்வாங்கி வேட்பாளரை நிறுத்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார் திருமாவளவன். இதற்கு பின்னணியில் திமுக தான் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் வசைபாட, அவரது சொந்த கட்சியினர் சிலரும் கூட அதையேதான் உறுதியாக நம்பினர். இதனால் கூட்டணிக்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் பணிகளிலும் இந்த மனக்கசப்பு எதிரொலித்ததால், திருமாவளவனும் செல்லுமிடமில்லாம் தன்னிலை விளக்கம் அளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். முழுக்க முழுக்க இந்த முடிவு தன்னுடையது தான் என்றும் யாரும் திருமாவளவனை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் சீறி, வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

கட்சியினருக்கே அதிர்ச்சி
தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக மற்றுமொரு வீடியோவை வெளியிட்டு அமைதியாக இருந்த தமிழ்நாட்டு அரசியலில் அனலை கிளப்பியிருக்கிறார் திருமாவளவன். காட்டுமன்னார்கோவிலில் தாம் போட்டியிடாததற்கான காரணத்தை மீண்டும் அதில் விளக்கியிருந்தார். தாம் போட்டியிடுவது பற்றி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் போட்டியிடுவது விசிக நிர்வாகிகளுக்கே அதிர்ச்சி தான் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஷா நவாஸ், பாலாஜி ஆகியோருக்கு பதில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தான் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், திமுக கூட்டணியில் விசிக இருக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க தன்னுடைய முடிவு தான் என்றும் கூறினார். அதோடு, திமுகவுடன் இணக்கமாக இருந்ததே அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் என சொல்பவர்கள் விசிக மீதான பொறாமையில் பேசுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

சுறுசுறுப்பின்றி...
இதில், கவனிக்கவேண்டியது என்னவென்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில் விசிகவினர் சுறுசுறுப்பின்றி பணியாற்றியதாக மனம் நொந்து பேசிய திருமாவளவன், வேலையே செய்யாதவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என அசாத்திய நம்பிக்கையுடன் பேசியிருக்கும் அவர், திமுக, அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் தனித்த சக்தியாக வர வாய்ப்பில்லை என உறுதியாக கூறியுள்ளார். அதேசமயம், இருகட்சிகள் மீதான எதிர்ப்பு வாக்குகளையும் விஜய் பெருவாரியாக அறுவடை செய்வார் என்ற திருமாவளவன், திமுக எதிர்ப்பு வாக்குகளை அதிமுக, தவெக, நாதக ஆகிய கட்சிகள் பிரித்துக் கொள்வதால் திமுகவே வெற்றி பெறும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved