Also Watch
Read this
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை, முதல்வர் விஜய் முன்மொழிந்தார். கர்நாடகத்தின் திட்டத்துக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டசபை 2ஆவது நாளில்...
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர், இன்று ஜூன் 19ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் மறைந்த மூத்த தலைவர்கள், திரை பிரபலங்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேகதாது விவகாரம்
தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய், மேகதாது விவகாரத்தில் கர்நாடகா நடவடிக்கையை எதிர்த்து அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது முதல்வர் விஜய் பேசியதாவது;
காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டப்பேரவையில் வலியுறுத்தல்
கர்நாடக அரசின் இந்த செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றம், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டுள்ளது, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து விட்டால், காவிரிப் படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை.

சட்டப்பேரவை தீர்மானம்
கர்நாடக அரசு மேகதாதுவிலோ, காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தையோ, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துமாறு மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ, அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு முதல்வர் விஜய் தீர்மானத்தை முன் மொழிந்தார்.

முதலாவதாக காங்கிரஸ் ஆதரவு
இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜேஷ் குமார்(காங்கிரஸ்) பேசியதாவது;
முதல்வர் விஜய் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. காவிரி என்பது ஒரு நதி மட்டுமல்ல, தமிழக விவசாயிகளின் உயிர்நாடி. அதனை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை உள்ளது. காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் காவிரி நடுவே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இது சட்டத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகும். காவிரி நீர் வழங்குவது குறித்து நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ஆண்டு தோறும் 177.25 டிஎம்சி தண்ணீரை மூன்று வழித்தடங்களில் கர்நாடக அரசு வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வரும் நீரைத் தடுத்து மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழகத்தின் பல பகுதிகளும் பாதிக்கும். கர்நாடக அரசின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கண்டிக்கிறது.
இவ்வாறு அமைச்சர் ராஜேஷ்குமார் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி மேகதாது அணை. அணை கட்டுவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி. கர்நாடகத்தில் அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அதை கடுமையாக எதிர்த்தார். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. தனித் தீர்மானத்தில், மேகதாது பிரச்சினைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். இந்த தீர்மானத்தை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதைவிட, அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஒன்றிணைந்து நேரடியாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

உதயநிதி கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்
இதுதொடர்பாக முதல்வர் விஜய் பேசியதாவது;
மேகதாது பிரச்சினைக்காக எனது தலைமையில் 26.05.2026 அன்று பிரத்யேகமாக தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தனி நடுவர் மன்றம் அமைக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த கருத்தை தீர்மானத்தின் 4ஆவது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம்.தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரித்த பேரவை உறுப்பினர்களுக்கு நன்றி.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.

அனைத்து கட்சிகளும் ஆதரவு
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மதிமுக, தேமுதிக, பாமக என்று அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்தன. இதனையடுத்து, மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார். இதன்பின் திருத்தப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved