Also Watch
Read this
நான்கு சட்டமன்ற உறுப்பினர்களோடு திமுக கூட்டணியில் இருந்தபோதே அமைச்சரவையில் இடம் கொடுக்காமல், தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பிடித்ததும் விசிகவினர் துரோகம் இழைத்துவிட்டதாக அவதூறு பரப்புவது எந்தவகையில் நியாயம் என, அமைச்சர் வன்னியரசு கேள்வி எழுப்பி உள்ளார். அவதூறு தொடருமானால் பதிலடியும் பயங்கரமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு, திமுகவினர் அவதூறு பரப்புவதே ஆற்றாமையின் வெளிப்பாடுதான் எனக்கூறி உள்ள அமைச்சர் வன்னி அரசு, ஆ.ராசா உள்ளிட்டோர் தங்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமே இல்லை எனவும் சாடியுள்ளார்.

தவெக அரசுக்கு ஆதரவு
சென்னை, ஓட்டேரியில் உள்ள ரெட்டமலை சீனிவாசன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு பேசியதாவது;
2016ஆம் ஆண்டில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்தார். 2017ல் இருந்து திமுக கூட்டணியில் தான் விசிக இடம் பெற்று இருந்தோம்.

2021ல் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளது. இடதுசாரிகளுடன் தான் நாங்கள் இருக்கப் போகிறோம் என்பதன் அடிப்படையிலும், முதலமைச்சரின் ஆதரவு கேட்ட கடிதத்திற்கு இந்த ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தந்துள்ளது.

விசிக மீது விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற அடிப்படையில் தான் பயணிக்க போகிறோம் என்று தெரிவித்தார். அதன் அடிப்படையில் அமைச்சரவையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு கொடுத்தனர்.

துரோகம் இழைத்தது போல திமுகவினர் பேசுகின்றனர்.யார் துரோகம் அழைத்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கோட்பாட்டில் திமுக அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. நாங்கள் தவெக அமைச்சரவையில் பங்கேற்றபின் எங்களை துரோகம் இழைத்ததாக விமர்சனம் செய்கின்றனர்.

திமுக மீது மரியாதை
கடந்த காலங்களில் திமுக உடன் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆ.ராசா போன்றோர் எங்கள் மீது மிகுந்த அவதூறுகளை பரப்புகின்றனர். அவதூறுகளை பரப்புவதை ஆற்றாமையின் வெளிப்பாடாக பார்க்கிறேன்.

தகுந்த பதிலடி தருவோம்
திமுகவினர் தொடர்ந்து அவதூறு பரப்பினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகுந்த பதிலடி கொடுப்போம். எங்களுக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.

இன்றைக்கு இருக்கின்ற இந்த களத்தில் எப்போதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரியமாக இருக்கும். இந்த களம் எங்களுக்கு புதிது அல்ல. விசிகவை விமர்சிப்பதன் மூலம் பாஜக, ஆர் எஸ் எஸ், சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிரான அரசியலை திசை திருப்புகின்ற வேலையில் திமுக செயல்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் வன்னியரசு பேசி உள்ளார்.