Also Watch
Read this
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக காங்கிரஸ் அரசு வழங்கவில்லை என திமுக குற்றம் சாட்டி உள்ளது. தேர்தலுக்கு முன்பே தவெக உடன் ரகசிய உறவு வைத்திருந்த காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசிடம் பேசி, முதலமைச்சர் விஜய் காவிரி தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

நீருக்கு வழியின்றி குறுவைத் தொகுப்பா?
இதுகுறித்து, திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
இன்று ஜூன் 12 ஆம் தேதி, கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம்.

அதற்கு முன்பாகவே ஆறு, வாய்க்கால்களில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை நீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண் துறையில் 9% வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு.

மேட்டூர் அணை திறக்கப்படவில்லை
மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் உள்ளனர் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல, நீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்று உள்ளார்.

காவிரி நீரை கொண்டு வருவாரா?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே த.வெ.க. உடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய்,

கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?
இவ்வாறு திமுக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved