Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி எக்ஸ் பதிவு :
ஈரானுக்கு எதிரான போர் செலவுகளை அமெரிக்கா குறைத்துக் கூறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இதுவரை நேரடியாக மட்டும் 10 லட்சம் கோடி செலவாகி உள்ளதாகவும், மறைமுக செலவுகள் இதைவிட மிக மிக அதிகம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா கூறியுள்ள தொகையை விட செலவு 4 மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்திய பட்டதாரி இளைஞர் தற்கொலை :
அமெரிக்காவில் விசா நெருக்கடி மற்றும் வேலை கிடைக்காத விரத்தியில் இந்திய பட்டதாரி இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானாவின் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சந்து இராகனாபொய்னா, சிகாகோவில் உள்ள டேபால் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு முடித்தும், H-1B விசா விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
14 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் :

சீனாவில் சக மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த மாணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. யுனான் மாகாணம் லுவோபிங் பகுதியை சேர்ந்த ஜியாங், தன்னுடன் பள்ளியில் படித்து வந்த சிறுமியை கடத்தி சென்று ஓரிடத்தில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தப்பிக்க முயன்றதால் அச்சிறுமியை தாக்கி கொலை செய்தான்.
5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு :

ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள உறவு விரிசலை தொடர்ந்து, ஜெர்மனியில் இருந்து 5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. ஈரான் விவகாரத்தில் ஜெர்மனியிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு பிடியாணை..?

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தில் முக்கிய நபர்களுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் நடைபெற்ற நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த அதிபர் அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்புத் தரப்பினருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved