Also Watch
Read this
By: Manigandan Raja

விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு நவம்பர் இறுதிவரை தடை :
விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு நவம்பர் மாத இறுதி வரை ரஷ்யா தடை விதித்துள்ளது. எனினும், அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் கீழ் செய்யப்படும் சரக்கு விநியோகங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தியது.
ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள், கிடங்குகள் மற்றும் குழாய் வழிகள் மீதான தாக்குதல்களை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளது.
வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு :

மியான்மர் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. கவுங் தத் கிராமத்தில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடத்தில் சேமித்து வைத்திருந்த சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் 25 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த நிலையில், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொழிற்சாலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு :
தென்கொரியாவில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேஜியோன் நகரில் ஹன்வா வான்வெளி மையம் சார்பில் செயல்படும் தொழிற்சாலையில், உபகரணங்களில் இருந்த வெடிக்கக் கூடிய பொருட்களை சுத்தம் செய்தபோது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக பிரான்ஸ் அறிவிப்பு :
சர்வதேச தடைகளை மீறி ரஷ்யா மற்றும் ஈரானின் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாக "டாகோர்" என்கிற ரஷ்ய எண்ணெய் கப்பலை அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் அதிரடியாக கைப்பற்றியது.
கப்பல்கள் சர்வதேச தடைகளை மீறுவதும், சட்டத்தை மீறுவதும், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போருக்கு நிதியளிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் விரைவில் சுமுக உடன்பாட்டை எட்டும் முயற்சிகள் :

ஈரானுடன் விரைவில் உடன்பாட்டை எட்டும் முயற்சிகளை மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்பை பாராட்டுவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழல் குறித்து டிரம்பிடம் பேசியதாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு உறுதியான உடன்பாட்டை விரைவில் எட்ட அவர் முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேல் - ஹிஸ்புல்லா தாக்குதலை நிறுத்த சம்மதம்" :

இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதலை நிறுத்தி வைக்க சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தாம் கேட்டுக் கொண்டதாகவும்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய படைகள் அங்கிருந்து பின்வாங்கி விட்டதாகவும், இனி லெபனானுக்கு இஸ்ரேல் படைகள் செல்லாது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தம் - ஈரான்
லெபனான், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்தி வைப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், லெபனான், காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved