Also Watch
Read this
By: Manigandan Raja

அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 26 பேர் பலி :
சீனாவில் மழை, வெள்ள பாதிப்புகளில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் சீனாவின் குவாங்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் 90 சென்டி மீட்டருக்கும் மேல் அதிகனமழை பெய்தது.
இதனால் நானிங் நகரில் உள்ள அணை நிரம்பி, திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ட்ரோன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான படகுகளுடன் 8 ஆயிரம் மீட்பு குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து :

சீனாவில் ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். காலணி தலைநகரம் என்று அழைக்கப்படும் ஜின்ஜியாங் நகரில் பிரபலமான ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று 239 பேர் பணியில் இருந்தனர்.
அப்போது, தொழிற்சாலையின் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென கட்டடம் முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் மொட்டை மாடிக்கு சென்று தஞ்சமடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், 213 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் 38 அம்ச கோரிக்கைகள் :
பாகிஸ்தான் அரசுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டக் குழுவினர் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உட்பட 38 அம்ச கோரிக்கைகளை அடுத்த 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றா விட்டால், மிகப்பெரிய மற்றும் இறுதிகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் குடியேறியுள்ள காஷ்மீரி அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 38 கோரிக்கைகளை மையமாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.