Also Watch
Read this
By: Manigandan Raja

விபத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி :
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒருவர் கத்தியுடன் புகுந்ததாகவும் அங்கு எரிவாயு நெடி வருவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை திறக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அந்த வீடு பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியதில், வீட்டின் ஜன்னல்கள் நொறுங்கியதோடு, வாசலில் நின்றிருந்த அதிகாரிகள் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர்.
ஜேபி மோர்கன் சேஸ் நிறுவன மூத்த நிர்வாகி மீது பாலியல் புகார்?
முன்னனி நிதி நிறுவனமான ஜேபிமோர்கன் சேஸ் நிறுவனத்தின் (((JPMorgan Chase))மூத்த நிர்வாகி லோர்னா ஹஜ்தினி ((Lorna Hajdini)) மீது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இனவெறி துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார்.
ஹஜ்தினி போதைப்பொருட்களை கொடுத்து, பணியிடத்தில் பல மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யதாகவும் அவரது ஆசைக்கு இணங்க மறுத்தால் வேலை மற்றும் போனஸை இழக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தாக நியூயார்க் கவுண்டி உச்ச நீதிமன்றத்தில் அளித்த புகாரில் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஹஜ்தினி, சம்பந்தப்பட்ட ஊழியர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்காக இழப்பீடாக பெறும் தொகையை கேட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானவை என கூறியுள்ளார்.
ஜீப் கவிழ்ந்த விபத்தில் 20 பக்தர்கள் உயிரிழப்பு :

நேபாள மலைப்பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பக்தர்கள் உயிரிழந்தனர். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு காத்மாண்டுவில் புத்த மடாலயத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் பக்தர்கள் மடாலயத்துக்கு சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், 700 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஈரானுடன் போரில் இல்லை என கூறியுள்ள டிரம்ப் நிர்வாகம் :

ஈரானுடனான போருக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடு மே ஒன்றாம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ஈரானுடன் போரில் இல்லை என அதிபர் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. அமெரிக்கப் போர் அதிகாரச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் முறையான அறிவிப்பு இல்லாமல் போரில் ஈடுபட்டால் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த 30 நாட்களுக்குள் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இந்நிலையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் ஈரான் உடன் போரில் இல்லை எனக் கூறியுள்ளார். ஈரான் உடன் பிப்ரவரி 28ம் தேதி போரை தொடங்கிய டிரம்ப் மார்ச் 2ம் தேதி ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற கப்பல்கள் :
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற கப்பல்களை இடைமறித்து, அதிலிருந்த நியூயார்க்கை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 175க்கும் மேற்பட்டோரை இஸ்ரேலிய படைகள் சட்டவிரோதமாக கைது செய்திருப்பதாக நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிரீஸ் கடற்கரைக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் சென்ற கப்பல்களை வழிமறித்து கைது செய்தது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று கூறியுள்ள அவர், கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் எங்கு உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தனது குழுவினர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved