Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 12:05 PM
By: Manigandan Raja

சவுதியில் உள்ள அமெரிக்கப் படைதளம் மீது ஈரான் தாக்குதல் :
சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கப் படைதளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 12வீரர்கள் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலை ஏப்ரல் 6ஆம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கப் படைதளம் மீது ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு ராணுவ விமானங்கள் சேதமடைந்ததாகவும், காயமடைந்தவர்களில் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் ட்ரோன் கிடங்கை தாக்கி அழித்த ஈரான் :
துபாயில் அமைந்துள்ள உக்ரைனின் ட்ரோன் கிடங்கை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்க படைகளின் மறைவிடமாக செயல்பட்ட உக்ரைன் கிடங்கு தாக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ முடியும் :
ஈரான் ஒரு போதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது எனவும், போருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா உதவ முடியும் எனவும் அந்நாட்டு ஆட்சியாளரின் இந்திய பிரதிநிதி அப்துல் மஜீத் ஹக்கிம் இலாஹி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அணு ஆயுதங்கள் தங்களிடம் இல்லை எனவும், தாங்கள் அதை தயாரிக்கவும், வைத்திருக்கவும் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேசமயம், தாங்கள் அணு ஆயுதம் வைத்திருக்க விரும்பினால், அவர்களால் தடுக்க முடியாது எனவும் கூறினார். மேலும், தற்போதைய போரில் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறுவது உண்மையல்ல என்றார்.
பிரதமர் மோடியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற ஆவல்:
பிரதமர் மோடியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளதாக நேபாள் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி வெற்றிபெற்று, ராப் பாடகர் பாலேந்திர ஷா பிரதமராக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். இந்த சூழலில், நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மக்களின் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மோடியுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved