Also Watch
Read this
By: Web Team

சிறு வணிகர்களுக்கு லட்சங்களில் ஜிஎஸ்டி வரி விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் கர்நாடகாவில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திடீரென 29 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பால், வாடிக்கையாளர்களிடம் இருந்து யுபிஐ மூலம் பணம் பெறுவதை வர்த்தகர்கள் தவிர்த்துள்ளனர்.
புதிய தலைவலியாக உருவெடுத்துள்ள இந்த பிரச்சனையால் ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கர்நாடக அரசு ஏற்படுத்தியது.
சிறு வர்த்தகர்களுக்கும், ஜிஎஸ்டி வரிக்கும் இருக்கும் பிரச்சனை என்ன..? திடீரென ஜிஎஸ்டி வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பியது ஏன்? ஜிஎஸ்டி வரியால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்களா..இனி யுபிஐ பண பரிவர்த்தனை இருக்காதா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சியால் டீக்கடை முதல் டீ மார்ட் வரை யுபிஐ டிரான்சாக்சன்ஸ் தான் நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹாவேரி பகுதியில் காய்கறி விற்கும் வியாபாரிக்கு 29 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த சொல்லி நோட்டீஸ் வந்துள்ளது.
காய்கறி வியாபாரி கடந்த 4 ஆண்டுகளில் வாடிக்கையாளரிடம் யுபிஐ மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் பெற்றதாக கூறி 29 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்த அந்த வியாபாரி நானே காய்கறி விற்று வருகிறேன்.
என்னை 20 லட்சம் ரூபாய் கட்ட சொல்லி வற்புறுத்தினால் என்ன செய்வேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் புதிய காய்கறிகளுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதிய காய்கறிகளைை விற்பனை செய்யும் தனக்கு எப்படி 29 லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வலியுறுத்துகிறார்கள் என்றும் அந்த வியாபாரி கேள்வி எழுப்புயுள்ளார்.
இது ஒருபக்கம் இருக்க, கர்நாடக மாநிலத்தில் வேறு சில பகுதிகளில் சிறு வர்த்தகம் செய்யும் வியாபாரிகளுக்கும் லட்சங்களில் ஜிஎஸ்டி வரி செலுத்த சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதாவது 40 லட்சம் ரூபாய்க்கு மேல் சரக்குகளை வாங்குவோருக்கும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்பவர்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக ஜிஎஸ்டி வரி வசூல் கவுன்சில் கூறியுள்ளது. இதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் 14000 ஆயிரம் சிறு வியாபாரிகள் யுபிஐ பண பரிவர்த்தனை செய்வதாக ஜிஎஸ்டி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யுபிஐ பண பரிவர்த்தனை அதிகமாக இருப்பதால் அதன் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை ஏற்க மறுக்கும் சிறு வணிகர்கள் ஜூலை 25ம் தேதி கர்நாடகா முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதற்கு கால் டாக்சி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் அத்தியாவசிய பொருளான பால் கூட விற்கப்படாது என கூறியுள்ளனர். இதுமட்டுமில்லாமல் கூகுள் பே, பேடிஎம்., போன்பே போன்ற யுபிஐ பணப்பரிவர்த்தனையை வர்த்தகர்கள் தவிர்த்துள்ளனர். விற்கப்படும் பொருட்களுக்கு பணத்தை மட்டுமே பெறுகின்றனர்.
வர்த்தகர்களின் இந்த நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஜிஎஸ்டியை தெரிந்து கொள்ளுங்கள் என்ற விழிப்புணர்வை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.
எனினும், ஜிஎஸ்டி குறித்து அரசு அளிக்கும் விளக்கத்துக்கு செவி சாய்க்காத சிறு வியாபாரிகள் 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இவ்வளவு நாள் இல்லாமல் 4 ஆண்டுகளுக்கான வரியை ஒரே நேரத்தில் செலுத்த சொல்லி வற்புறுத்துவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, வருகின்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிப்பதாக தெரிவித்துள்ளார். அதுவரை ஜிஎஸ்டி வரி என்றால் என்ன என்பது குறித்தும், யாரெல்லாம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதேபோல் ஜிஎஸ்டி வரி சர்ச்சை குறித்து பேசிய வணிக வரி ஆணையர் விபுல் பன்சால், ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அனைவருக்கும் சென்றுள்ள நோட்டீசில் வியாபாரிகள் வரி கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.
இன்னும் வரி கூட மதிப்பிடவில்லை. பண பரிவர்த்தனை குறித்து தெரிந்து கொள்ளவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் வணிக பண பரிவர்த்தனை தகவல்களை கொடுத்து ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கோ அல்லது சரியான வரியையோ செலுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ள ஜிஎஸ்டி வரி சர்ச்சை யுபிஐ பணபரிவர்த்தனையை பெரிதாக பாதித்துள்ளதால் அரசு எடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved