Also Watch
Read this
By: Web Team

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை, அண்ணாநகர் பகுதியில், 'ஜூடோ' எனும் தற்காப்பு கலை பயிற்சி மையத்தை நடத்தி வந்தவர் கெபிராஜ். 41 வயதான இவர், கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர தற்காப்பு கலை பயிற்சியாளராக, சில ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில தனியார் பள்ளிகளிலும், பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
பயிற்சி பெறும் மாணவிகளை போட்டிக்காக, வெளி மாவட்டங்களுக்கு கெபிராஜ் அழைத்து செல்வது வழக்கம். இதன்படி, கடந்த 2014ம் ஆண்டு தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவிகளை நாமக்கல் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்த பின்னர், நாமக்கல்லில் இருந்து ஈரோடு ரயில் நிலையத்துக்கு காரில் வந்த போது, 19 வயது மாணவிக்கு, கெபிராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அந்த மாணவி கடந்த 2021ல் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, கெபிராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், பலருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிய வந்ததால், இந்த வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், 2022 மே 19ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், 'கெபிராஜ் குற்றவாளி' என்று நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில், தண்டனை விவரத்தை அறிவித்த நீதிபதி, கராத்தே மாஸ்டர் கெபிராஜூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved