Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல், அப்பனேந்தல் , ஏனாதி, கொண்டுலாவி, கீழசாக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்பயிர்கள் அனைத்தும் கருகி போய் போதிய மகசூல் கிடைக்கவில்லை.
துவக்கத்தில் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் நம்பிக்கை அடைந்த விவசாயிகள் 110 நாட்களில் மகசூல் தரும் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். 90 நாட்களாக பயிர்கள் பாதிப்பின்றி வளர்ந்தது. கதிர் விடும் கடைசி நேரத்தில் மழை பொய்த்து போய் விட்டது.
குறைந்த பட்சம் ஏக்கருக்கு உழவு , உரம் , களை எடுத்தல் , பூச்சி மருந்து என 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நெற்பயிருக்கு விவசாயிகள் செலவு செய்திருந்தனர். பருவமழை பொய்த்ததால் விளைச்சல் இன்றி நஷ்டம் அடைந்துள்ளனர்.
அறுவடை செய்யப்படும் நேரத்தில் பால் பிடித்த கதிர்கள் காய்ந்த நிலையில், நெற்பயிர்கள் சாவியாகிப் போனது. இதனால் கலங்கி போன விவசாயிகள் தங்கள்
வாழ்வாதாரமாக இருக்கக் கூடிய கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு , இதில் உள்ள வைக்கோலை விவசாயிகள் சேகரித்து வருகின்றனர்.
இதனால் இந்தாண்டும் விவசாயத்தில் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். மழை பெய்யாமல் இருந்திருந்தால் பராமரிப்பு செலவு செய்யாமல் விட்டிருப்பார்கள். இறுதி வரை வளர்ந்து , விளையும் நேரத்தில் கருகியதால் அனைத்து செலவுகளும் வீணாகியது.
இறுதியாக கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் மட்டுமே மிஞ்சியது. ஆகையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் தர வேண்டும் என
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved