Also Watch
Read this
திருவள்ளூர் அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 வயது பெண் குழந்தையை அதே மாநிலத்தை சேர்ந்த 19 வயது காமுகன் பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசிய நிலையில், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த குழந்தை உயிரிழந்தது பலரையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது. 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து பிஞ்சு உயிரை நசுக்கிய கொடூர இளைஞனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் சாலைக்கு வந்து தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

3 வயது சிறுமி...
வெறும் 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டுக்காக அப்பாவி குழந்தை குடுகுடுவென ஓட, அந்த பிஞ்சு உயிரை தன் நஞ்சு வேலையால் நாசமாக்கி இந்த கொடூரன் முட்புதரில் வீச, அடுத்த சில மணி நேரங்களிலேயே அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பிஞ்சு உயிர் பரிதாபமாக அடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பீகார், உத்திரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இந்நிலையில், ஒரு வடமாநில தாய் தனது 3 வயது மகளை திடீரென காணவில்லை என அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

19 வயது இளைஞன்
இதனிடையே, ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு முட்புதரில் உடல் மற்றும் முகத்தில் நகக் கீறல்களுடன் மயக்க நிலையில் குழந்தை கிடந்துள்ளது. இதனைக்கண்ட ஒரு பெண் ஊருக்குள் ஓடிவந்து தகவல் சொல்ல, பக்கத்து வீட்டை சேர்ந்த பிபின் மஞ்சி என்ற 19 வயது இளைஞன்தான் குழந்தைக்கு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றதாக கூறி உள்ளார். அதன்பிறகு கிராமத்தில் உள்ள பெண்கள் பிபின் மஞ்சியின் வீடு புகுந்து அடித்து துவைத்து விசாரித்தனர். அப்போதுதான், தான் செய்த ஒரு கொடூர செயலை பற்றியே வாய் திறந்துள்ளான் இளைஞன்.

5 ரூபாய் பிஸ்கெட்...
பீகார் மாநிலத்தை சேர்ந்த குழந்தையின் பக்கத்து வீட்டில்தான் அதே மாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சி உள்ளிட்ட 4 பேர் தங்கி உள்ளனர். அவர்கள் தினமும் குழந்தையுடன் விளையாடுவதும், பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட திண்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதும் வழக்கம். அப்படித் தான், சம்பவத்தன்றும் 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்து கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத முட்புதருக்கு குழந்தையை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் பிபின் மஞ்சி. அதன்பிறகு, குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு எதுவுமே தெரியாததுபோல வீட்டுக்கு வந்த அந்த கொடூரன், தன் மகளை தேடி அலைந்த தாயிடம் ”லடுக்கி” இங்குதான் விளையாடி கொண்டிருந்ததாக இயல்பாக பேசி உள்ளான். இந்தியில் சிறுமியை லடுக்கி என அழைப்பார்கள். அதனால், இளைஞனும் குழந்தையை எப்போதுமே அப்படிதான் அழைப்பானாம்.

பொது மக்கள் வாக்குவாதம்
தன் அம்மாவிடம் செல்ல வேண்டும் என இந்திமொழியில் அழுது அடம்பிடித்த பிஞ்சு குழந்தையின் பிறப்புறுப்பை ஆத்திரத்துடன் தாக்கி தன் அரக்க புத்தியை காட்டிய கயவன் பிபின் மஞ்சியை போலீசில் ஒப்படைத்த பெண்கள், இந்த பாலியல் வன்கொடுமையில் இளைஞனுடன் தங்கி இருந்த மற்ற 3 இளைஞர்களும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். எனவே, தப்பி ஓடிய அந்த 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனவும் தங்கள் பகுதியில் வட மாநிலத்தவர்களே வசிக்க கூடாது எனவும்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம், வடமாநிலத்தை சேர்ந்தவர்களே வடமாநில குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளபோது தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் வீடு திரும்பும் தங்களால் எப்படி பிள்ளைகளை வீட்டில் விட்டு நிம்மதியாக இருக்க முடியும்? எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் அவர்கள் கலைந்து சென்றனர்.

குழந்தை உயிரிழப்பு
இதனிடையே, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் கொந்தளித்த மக்கள், சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக ஆவேசமாக வந்தனர். அப்போது, கும்மிடிபூண்டி - சிப்காட் பிரதான சாலையிலேயே போலீசார் வழிமறிக்க, ஆத்திரமடைந்த அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் ஆத்திரம்
கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரமாக சமாதான பேச்சுவார்த்தை, வாக்குவாதம், தள்ளுமுள்ளு என சாலையே பரபரப்பானது. இதனால், போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால், அடுத்த அரை மணி நேரத்திலேயே அவர்கள் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்வோம் என பெண்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

காவல்துறை விளக்கம்
இதனிடையே, குழந்தை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பிபின் மஞ்சி மட்டும்தான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறமிருக்க ஸ்டான்லி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர், குழந்தையை நாசம் செய்த கொடூரனுக்கு கொடுக்கும் கடுமையான தண்டனையை பார்த்து, இனி இதுபோன்ற தவறுகளே நடக்கக்கூடாது என ஆவேசம் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved