Also Watch
Read this
பெண்களை சுற்றியே சர்ச்சையை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள சின்னத்திரை பிரபலம் நாஞ்சில் விஜயன் மீது, அவரது மாஜி தோழியான டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன் தங்கை திருமணத்திற்கு கடனாக வாங்கிய 2 லட்சம் ரூபாயை 8 ஆண்டுகளாகியும் திருப்பித் தராத நாஞ்சில் விஜயன் ஆட்களை வைத்து மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டி உள்ள சூர்யா தேவி, தனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்ச்சை நாயகன்...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, மிமிக்ரி மற்றும் நகைச்சுவை பேச்சின் மூலம் பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன். அதேபோல், சில படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். இவற்றையெல்லாம்விட இவரை விடாமல் தொற்றிக்கொள்ளும் சர்ச்சைகள் தான் அவருக்கு பெரிய பப்ளிசிட்டியையே தேடிக் கொடுத்தது. பூவும் நாறும்போல சர்ச்சையும் நாஞ்சில் விஜயனும் என பலர் விமர்சனம் செய்ததுண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண் வேடத்தில் காமெடி செய்து பலரது கவனத்தை ஈர்த்த நாஞ்சில் விஜயனின் வழக்கு விவகாரமும் அதே பெண்களை சுற்றிதான் சுழலுகிறது.

நாஞ்சில் விஜயன் vs சூர்யா தேவி
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் நண்பர்களாக பழகி வந்த டிக்டாக் பிரபலம் சூர்யா தேவியும், நாஞ்சில் விஜயனும் 2020ல் வனிதா விஜயகுமாருக்கு மூன்றாவது திருமணம் நடந்தபோது மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டனர். அந்த கருத்து யுத்தத்தில் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் பேசியதால் கோபமடைந்த சூர்யா தேவி நாஞ்சில் விஜயனின் அலுவலகத்திற்கு நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, சூர்யா தேவியை நாஞ்சில் விஜயன் கட்டையால் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்தார் நாஞ்சில் விஜயன்.

திருநங்கை புகார்
இதனை தொடர்ந்து திருமணம், குழந்தை, குதூகல வீடியோ என குடும்பத்தை கவனித்து வந்த நாஞ்சில் மீது வைஷூ என்ற திருநங்கை கடந்த ஆண்டு புதிய சர்ச்சையை கிளப்பினார். திருமணத்திற்கு முன்பு 6 ஆண்டுகள் நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகி குடும்பம் நடத்தியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறிய திருநங்கை வைஷூ திருமணத்திற்கு பின் 6 ஆறு மாதங்களாக தனது செல்போன் நம்பரையே ப்ளாக் செய்து வைத்திருப்பதாகவும், அவரால் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

மீண்டும் சூர்யா தேவி
இந்த சர்ச்சை தற்போது தான் லேசாக அடங்கி உள்ளது. அதற்குள், நாஞ்சில் விஜயன் மீது மாஜி தோழியான சூர்யா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது தங்கையின் திருமணத்திற்காக நாஞ்சில் விஜயன் தன்னிடம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வாங்கியதாகவும், மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தருவதாக கூறியும் தற்போதுவரை திருப்பி தரவே இல்லை எனவும் கூறிய சூர்யா தேவி கொடுத்த பணத்தை கேட்டால் ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

பணம் வாங்கிவிட்டு மிரட்டல்
நாஞ்சில் விஜயனே ஒரு கிரிமினல்தான், வாய்ஸ் ரெக்கார்ட் செய்யக்கூடாது என்பதற்காகவே வாட்ஸ் அப்பில்தான் போன் செய்து பேசுவார் எனக்கூறிய சூர்யா தேவி, நட்பின் அடிப்படையில் தான் நம்பிக்கையுடன் பணம் கொடுத்தாகவும், அந்த நம்பிக்கையையே சுக்குநூறாக உடைத்துவிட்டதாகவும் கண்ணீர் சிந்தினார். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் திருநங்கை வைஷூ விவகாரத்தில் தன்னிடம் நாஞ்சில் விஜயன் உதவி கேட்டதாகவும், மனிதாபிமானத்தில் தான் அந்த நேரத்தில் உதவி செய்ததாகவும் கூறிய சூர்யா தேவி, கடந்த மே 22ஆம் தேதி மதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த எக்ஸ்போவில் தன்னை சந்திக்க வரவழைத்து மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.

பணத்தை மீட்டுத் தர கோரிக்கை
மனிதர்களை தன் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டு அதன் பிறகு தூக்கிப் போடுவதில் மட்டும் நாஞ்சில் விஜயன் கெட்டிக்காரர் அல்ல, அவர்களை மிரட்டி கெட்டபெயர் ஏற்படுத்துவதிலும் கில்லாடி எனக்கூறிய சூர்யா தேவி, தன் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved