Also Watch
Read this
By: Fyrose Banu

திருநெல்வேலி மாவட்டம் கூந்தன் குளம், வடக்கு கழுவூர் பறவைகள் சரணாலயப் பகுதிகளுக்கு மணிமுத்தாறு தண்ணீர் வராததால் குளங்கள் காய்ந்து கிடக்கின்றன உணவின்றி வெளிநாட்டு பறவைகள் பரிதாபமாக இறக்கின்றன.
10 கன அடி தண்ணீரே திறப்பு
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 80 அடி கால்வாய் வழியாக நாங்குநேரி, பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அணையில் நீர் இருப்பினும், மூன்றாம், நான்காம் ரீச் பகுதிகளுக்கு வெறும் 10 கன அடி தண்ணீரே திறக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள்
ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும்போது தமிழ் மாதமான தை, மாத காலகட்டத்தில் ஆண்டுதோறும் வலசை பறவைகள் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பகுதிக்கு வந்து, ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் முடிந்து குஞ்சுகளுடன் திரும்புவது வழக்கம்.

வருடம் தோறும் வரும் வெளிநாட்டு பறவைகள்
இங்கு குளம் மற்றும் மரங்களில் பாதுகாப்பாக கூடுகட்டி வசிப்பதற்கு செங்கால் நாரை, நீண்ட கழுத்து கொக்கு, கருங்கொக்கு, கூழைக்கடா, நீர் காகம், அகப்பை வாயன், நத்தை கொத்தி உட்பட பல ஆயிரக்கணக்கான பறவைகள் வருடம் தோறும் வந்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து தங்களது நாட்டிற்கு திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.

பரிதாபமாக உயிரிழக்கும் பறவைகள்
ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாததால் கூந்தன்குளம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகள் வறண்டு கிடக்கின்றன. இதன் விளைவாக கூந்தன்குளம், வடக்கு கழுவூர், உள்ளிட்ட பறவைகள் அதிகம் வசிக்கும் குளங்களுக்கு நீர் வந்து சேரவில்லை. குளங்களில் நீரின்றி, உணவு வளமும் குறைந்ததால், பல வலசை பறவைகள் சோர்வடைந்து வெயிலின் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழக்கின்றன.

குறைந்த அளவிலான பறவைகளே வருகை
இந்த ஆண்டு கூந்தன் குலத்திற்கு குறைந்த அளவிலான பறவைகளை வந்துள்ளன. வடக்கு கழுவூர் குளத்தில் தண்ணீர் போதிய அளவு இல்லாத காரணத்தினாலும்,பறவைகள் வெயிலின் தாக்கத்திலும், போதிய குழுமை கிடைக்காதாலும் கூட்டிலேயே உயிரிழந்து கிடக்கும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் இல்லாமல் உயிரிழக்கும் குஞ்சுகள்
இதுகுறித்து பறவை ஆர்வலரான வடக்கு கழுவூர் ஊரை சேர்ந்த மாற்றுத் திறனாளி வேல்முருகன், தான் இந்த பறவைகளை பாதுகாத்து வருவதாகவும், இங்கு வரும் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்து மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலையில் இந்த வருஷம் மழை பெய்து தண்ணீர் குறைந்து விட்டதால் தண்ணீர் இல்லாமல் குஞ்சுகள் உயிரிழந்து வருவதாக வேதனை தெரிவித்தார். 
மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
மேலும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமலும், தண்ணீர் கிடைக்காததாலும் பறவைகள் உயிரிழந்து வருகிறது என்றும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து தண்ணிக்கு வருவதற்கு உரிய ஏற்பாடு செய்து தங்களுக்கு தண்ணி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் உடனடியாக திறந்து விட்டால் பறவைகளுக்கும் விவசாயத்துக்கும் போதுமானதாக இருக்கும் எனவும் வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தற்பொழுது மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் குளங்களை வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved