Also Watch
Read this

தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட 52 லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை இன்று, முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். சென்னை பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்தியாவில், இளம்பிள்ளை வாதம் எனும் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளதால், தற்போது ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து தரப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடுமுழுவதும் இன்று ஜூன் 28ஆம் தேதி ஞாயிறன்று நடைபெறுகிறது.
தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
சென்னை, பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமை இன்று காலை முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட 52 லட்சத்து 91,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எங்கெங்கு முகாம்?
தமிழகத்திலுள்ள
அரசு மருத்துவமனை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அங்கன்வாடி மையம்
சத்துணவு மையம்
பள்ளிகள்
மக்கள் கூடும் முக்கிய இடங்கள்
மொத்தம் 43,051 மையங்கள்

நடமாடும் குழுக்களும் தயார்
பேருந்து நிலையம்
ரயில் நிலையம்
விமான நிலையம்
சுங்கச் சாவடிகளிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொலைதூர மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.
சுகாதாரப் பணியாளர், அங்கன்வாடி பணியாளர், ஆசிரியர், தன்னார்வலர் உள்ளிட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போலியோ சொட்டுமருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யார் யாருக்கு?
ஏற்கெனவே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தந்து இருந்தாலுர், தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி மீண்டும் சொட்டு மருந்து வழங்க வேண்டும். சமீபத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30ஆம் தேதிகளில் தற்காலிக மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.