Also Watch
Read this
நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவரை தலைமை ஆசிரியர் காதை பிடித்து திருகி ரத்தம் வரும் வரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீர் கழிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட பிரச்சனையை காரணம் காட்டி, மாணவரை அடித்த தலைமை ஆசிரியர் சாதியை சொல்லி திட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளியில் நடந்தது என்ன?

பள்ளிக்கூடத்திலேயே...
ஒழுக்கத்தையும் நல்ல நெறிமுறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடத்திலேயே, தலைமை ஆசிரியர் ஒருவர் மாணவரை ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்கியிருப்பதுடன், சாதி ரீதியான இழிசொற்களைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் கல்விச் சூழலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை டவுண் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சாப்டர் பள்ளியில் படித்து வரும் பழையபேட்டை பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், இடைவேளையின் போது சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு சில மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை கண்ட உடற்கல்வி ஆசிரியர், சண்டையில் ஈடுபட்ட மாணவர்களுடன் சேர்த்து சண்டையில் சம்பந்தப்படாத மாணவரையும் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

விசாரிக்காத தலைமை ஆசிரியர்...
அப்போது நடந்தது என்ன ? என்ன ஏதென்று எதையும் விசாரிக்காத தலைமை ஆசிரியர், மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தோப்புக்கரணம் போடச் சொல்லி பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் எதிலும் சம்பந்தப்படாத பத்தாம் வகுப்பு மாணவர் தாம் எந்த தவறும் செய்யவில்லை என தலைமை ஆசிரியரிடம் எடுத்துரைத்தபோதும், அவர் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
நீ என்ன சாதி...?

காவல்நிலையத்தில் புகார்
பத்தாம் வகுப்பு மாணவரின் காதை பிடித்து திருகியதில் அவரது காதில் ரத்தம் வந்துள்ளது. வலியால் துடிதுடித்த மாணவர் ரத்தக் காயங்களுடன் வீட்டிற்குச் சென்று, பெற்றோரிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கூறிய மாணவனின் பெற்றோர், மாணவர்கள் தவறு செய்யும் போது அவர்களை கண்டிக்கும் வகையில் லேசாக தண்டிப்பது தவறல்ல. ஆனால், காயம் ஏற்படும் அளவிற்கு அடித்து துன்புறுத்தியதோடு, மாணவர்களிடம் சாதி எண்ணத்தை விதைக்கும் வகையில் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றவர்கள், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

சட்டப்படியான நடவடிக்கை
இச்சம்பவத்தில் உடல் ரீதியான தாக்குதல் மட்டுமின்றி, தலைமை ஆசிரியர் காட்டிய சாதிய பாகுபாடும், மனிதநேயமற்ற அணுகுமுறையும் மிகுந்த கண்டனத்திற்கு என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்தனர். பள்ளிகள் அறிவை வளர்க்கும் இடங்களாக மட்டுமில்லாமல், சமத்துவத்தையும் சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இடங்களாகத் திகழ வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில், கல்வித் துறையும் காவல்துறையும் உடனடியாகத் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved