Also Watch
Read this
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ’வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டு, வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா, கடந்த 23ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து, தினந்தோறும், காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்தார். ஒன்றாம் தேதி பங்குனி உத்திரமும் 2ம் தேதி சூரசம்ஹார லீலையும் 3ம் தேதி பட்டாபிஷேகமும் 4ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது.

களை கட்டிய தேரோட்டம்
இதன் தொடர்ச்சியாக, இன்று ஏப்ரல் 5ஆம் தேதி, தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் தங்க அங்கி அலங்காரத்தில் திருத்தேரில் 5.30 மணிக்கு எழுந்தருளினர். இந்த தேரோட்டத்திற்கு குடும்பத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள கிராம பொது மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் வீதி உலா
திருத்தேர் கிரி வீதி வலம் வந்த போது சிவபக்தர்கள், மேள தாளங்களுடன் வந்தனர். சில பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சங்கு ஊதி வந்தனர். வழிநெடுகிலும் நீர் மோர் பந்தல், அன்னதானம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்
மலைக்கு செல்லும் பாதையில் உள்ள பெரிய ரதவீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில், பள்ளிவாசல் அருகே தேரோட்டம் வந்தபோது, பொதுமக்கள், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved