Also Watch
Read this
By: Manigandan Raja

சேலம் மாவட்டம் சங்ககிரி பவானி சாலையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக சங்ககிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மேற்பார்வையில், எஸ்.ஐ. அழகுதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சங்ககிரி கோட்டத்தெருவைச் சேர்ந்த ரோஷன் (22), அப்பு (23), சாரதி ஆகிய மூவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர்.
சுற்றிவளைத்தபோது சாரதி தப்பியோடினார். ரோஷன் மற்றும் அப்புவை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 40 போதை மாத்திரைகள் மற்றும் 4 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இந்த மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்காக பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரோஷன் மற்றும் அப்புவை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை கைப்பற்றி, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பியோடிய சாரதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved