Also Watch
Read this
டெல்டாவின் வாழ்வாதாரமான மேட்டூர் அணையின் நீர் இருப்பு சரிந்து குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள சூழலில், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து சுருங்கி நிலத்தடி நீர்மட்டமும் பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் திருச்சி மாநகராட்சியில் நாளொன்றுக்கு 15 எம்.எல்.டி. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர் லாரிகளை நாடும் அவலம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் காவிரி, கொள்ளிடம் ஆற்றுப் படுக்கையை நம்பியுள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கரை புரண்டோடும் காவிரியில்...
ஆடிப்பெருக்கு வந்தால், கரை புரண்டு ஓடும் காவிரி தாயின் மடியில், இப்போது சுடுமணல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ட்ரோன் கேமராவில் முக்கொம்பு மேலணையை பார்த்தால், அது ஆறா இல்லை ராஜஸ்தான் பாலைவனமா என்று நெஞ்சம் பதறுகிறது.

டெல்டாவின் வாழ்வாதாரமான மேட்டூர் அணையில் நீர் இருப்பு சரிந்துவிட, ஜூன் 12ல் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இன்னும் கதவுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பொய்த்ததால் முப்போகம் விளைவித்த தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடிக்கு கூட வழியின்றி விழிபிதுங்கி நிற்கின்றன. மோட்டார் வைத்திருக்கும் சில விவசாயிகள் குறுவையை தொடங்கினாலும், நிலத்தடி நீரும் வற்றி வருவதால் அந்த நம்பிக்கையும் இப்போது கைநழுவி போகிறது.
நிலத்தடி நீர் மட்டம்...

நீரின்றி பொது மக்கள் வேதனை
திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளின் கதை இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சுமார் 11 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நகரில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு வழக்கமாக விநியோகிக்கப்படும் 165 எம்.எல்.டி. தண்ணீரில், இப்போது 15 எம்.எல்.டி. நீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

நாளொன்றுக்கு 149 எம்.எல்.டி. மட்டும் விநியோகிக்க முடிகிறது. முன்பெல்லாம் காலையும், மாலையும் சலசலவென ஓடிய குழாய்களில், தற்போது காலை மட்டுமே தண்ணீர் வருகிறது. பல இடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள், சில இடங்களிலோ 2 நாட்களுக்கு மேலாக சொட்டு தண்ணீர் கூட எட்டிப் பார்ப்பதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழை நீர் சேகரிப்பு திட்டம்
மேட்டூர் திறந்தால் தான் விடிவு என்று அதிகாரிகள் கையை விரிப்பதால், மக்கள் குடிநீருக்காக தனியார் லாரிகளை தஞ்சம் புக தொடங்கி இருக்கின்றனர். இந்த அவலத்திற்கு இயற்கை மட்டும் காரணமில்லை. நம் கடந்த ஆட்சியாளர்களின் தொலைநோக்கின்மையும் தான் காரணம் என்கிறார்கள்.

அன்றைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், திருச்சி மாநகராட்சியில் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு இல்லை என்றால் வரி வசூலிக்கப்படாது, அபராதம் விதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால், அவருக்கு பின் வந்த ஆட்சியாளர்கள் இத்திட்டத்தை கிடப்பில் போட்டதன் விளைவை, இப்போது நிலத்தடி நீர்மட்ட சரிவில் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

திருச்சி மக்களின் ஆவேச குரல்
இந்த சூழலில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துள்ளார். காவிரி ஆற்றில் ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதை ஆயிரத்து 500 கன அடியாக உயர்த்தி திறந்து விட்டால், திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை முற்றிலுமாக நீங்கும் என்று அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நகருக்குள் குடிநீரை வணிகமாக்கும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி, மாநகராட்சியே அந்த தண்ணீரை மக்களுக்கு சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரி ஆற்றை மட்டுமே நம்பி இருக்காமல் உடனடியாக மாற்று திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதே திருச்சி மக்களின் ஆவேச குரல்.