Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் களக்காட்டில் புனரமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனுமதி
மறுத்ததைக் கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
களக்காட்டில் ஏற்கனவே கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் கல் சிலைக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய முழு உருவ வெண்கலச் சிலை புனரமைக்கப்பட்டு கடந்த 25-ஆம் தேதி திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த விழாவிற்கு நெல்லை மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, களக்காடு வட்டார
தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கம் சார்பில் ஸ்டேட் வங்கி அருகே இந்த கண்டன
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
முன்னதாக, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிர்வாகிகள் அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தை அடைந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ ஆகிய அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும், பல்வேறு தலித் அமைப்புகளின் பிரதிநிதிகள் உன் கிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கு நாட்டில் எந்த இடத்திலும் சிலை வைப்பதற்குப் போராட வேண்டிய சூழல் நிலவுவது வேதனைக்குரியது என ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.
ஏற்கனவே சிலை இருந்த இடத்திலேயே கல் சிலையை அகற்றிவிட்டு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாகச் சிலை வைக்க அனுமதி தரவில்லை என்றால் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட உள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், இனியும் காலதாமதம் செய்யாமல் புனரமைக்கப்பட்ட அம்பேத்கரின் வெண்கலச் சிலையை உடனடியாகத் திறந்து வைப்பதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தித் தீவிர முழக்கங்களை எழுப்பினர்.