Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொன்னாம்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை ஊர் பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால் தண்ணீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் கொன்னாம்பட்டி அருகே உள்ள 2 தனியார் தொழிற்சாலைகளை சோதனை செய்தனர் அப்போது ஊராட்சி குடிநீர் குழாயில் திருட்டுத்தனமாக பைப் லைன்கள் அமைத்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுவது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர், திருட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து ஜேசிபி மூலம் திருட்டு பைப் லைன்கள் அகற்றப்பட்டன.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 தொழிற்சாலைகளுக்கும் ஊராட்சி நிர்வாகம் அபராதம் வித்துள்ளது. இனிமேல் கொன்னாம்பட்டி கிராமத்திற்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம்
செய்யப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.