Also Watch
Read this
By: Manigandan Raja

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 20000க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஏரியிலும், கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு ஏரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. அண்மையில் 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் கருங்கற்களை கொட்டி தடுப்புச்சுவர் அமைத்து நிரந்திர முகத்துவாரம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த முகத்துவாரத்திலும் மணல் திட்டுக்கள் உருவாகி மீனவர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். முகத்துவாரம் அடைபட்டு குறுகிய அளவில் மட்டுமே நீரோட்டம் சென்று வருவதால் கடலுக்கு சென்று வருவதில் சிரமம் உள்ளதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பழவேற்காடு முகத்துவாரத்தில் படகில் பயணித்து முகத்துவாரத்தை ஆய்வு செய்தார். முகத்துவாரத்தின் அமைப்பு குறித்து அதிகாரிகள் அமைச்சரிடம எடுத்துரைத்தனர். 10 நிமிடத்தில் ஆய்வை முடித்து கொண்டு புறப்பட்ட அமைச்சர் ஸ்ரீநாத் இடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டிய போது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

மேலும் முகத்துவாரத் திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அருகே இருந்த கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு அரண் அமைத்து செய்தியாளர்களை விலக்கி விட்ட போது அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்காமல் விறுவிறு என அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
தொடர்ந்து படகில் ஏறிய அமைச்சரிடம் மீனவர்கள் குறைகளை கேட்காமல் ஏன் செல்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முகத்துவாரத்திற்கு ஆய்விற்கு வந்த அமைச்சர் மீனவர்களிடமும், மீன் சந்தையில் உள்ள மீனவப் பெண்களிடமோ நேரடியாக சந்தித்து எந்த குறைகளையும் கேட்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
முகத்துவாரத்தை டிரெஜர் இயந்திரம் கொண்டு முறையாக தூர்வாரிட வேண்டும் என்ற கோரிக்கையை கேட்காமல் அமைச்சர் சென்று விட்டதாக புகார் தெரிவித்தனர். மீன் சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தங்களது கோரிக்கைகளை முன்வைக்க காலையிலிருந்து காத்திருந்ததாகவும் அமைச்சரிடம்
பேசிவிடாமல் காரில் அமர்ந்திருந்தவரை மட்டுமே பார்த்ததாகவும் மீனவப் பெண்கள் ஏமாற்றம் தெரிவித்தனர்.
வனத்துறை ஓய்வு இல்லத்தில் சந்திப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறியதால் அங்கு காத்திருந்த நிலையில், மீனவர்களை வெளியே காக்க வைத்து விட்டு அமைச்சர் ஓய்வறையில் இருப்பதால் அமைச்சரை சந்திக்க விடாதது ஏன் என மீனவர்கள் கட்சி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.