Also Watch
Read this
எப்போதும் ஆர்ப்பரித்து ஓடும் காவிரியின் சத்தத்தால், விழித்தெழும் ஒகேனக்கல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து இன்றி வறண்டு, கற்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழும் தொழிலாளர்களும், குறுவை சாகுபடிக்காக காத்திருந்த விவசாயிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

எதிர்பார்ப்பு ஏமாற்றம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் காலில் சலங்கையிட்டு ஆர்ப்பரித்து ஓடும் காவிரி, இந்த ஆண்டு நீரின் சலசலப்புக்குப் பதிலாக வெறுமையின் அமைதியினால் ஆட்கொள்ளப்பட்டு அபாயகர நிலையில் உள்ளது.
பொதுவாக, கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும். அந்த நீரை எதிர்நோக்கி ஒகேனக்கல் மட்டுமல்ல, மேட்டூர் அணையையும் நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் இதயங்களும் காத்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறியுள்ளது.

12 ஆண்டுக்குப் பிறகு...
போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகா அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்ட நிலையை எட்டியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் இதேபோன்ற வறட்சி நிலை ஏற்பட்டிருந்தது. அதன்பிறகு கடந்த ஆண்டுகள் அனைத்திலும் ஜூன் மாதத்திலேயே நீர்வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி 6 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாத இறுதிக்குள் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் உயர்ந்தது.

வாழ்வாதாரம் பாதிப்பு
ஆனால், இந்த ஆண்டு நீர் வரத்து இல்லாமல் போனதால், வெண்பஞ்சு போல ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவிகள் இன்று பாறைகளும், கற்களும் தெரியும் அளவிற்கு வறண்டு காணப்படுகிறது. இதனால், ஒகேனக்கலை நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், மீன் விற்பனையாளர்கள், சிறு வியாபாரிகள் என பலரது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. இருக்கும் கொஞ்ச நெஞ்ச தண்ணீரிலும் ரசாயனக் கழிவுகள் கலந்து பச்சை நிறத்தில் துர்நாற்றம் வீசி காணப்படுவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதோடு அத்தி பூத்தாற்போல் எட்டிப்பார்க்கும் சுற்றுலாப்பயணிகளும் நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு திரும்பி செல்கின்றனர்.

வறண்ட ஆற்றுப்படுகை
இன்னொரு புறம், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளதால், வழக்கம்போல் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய பாசன நீர் திறக்கப்படவில்லை. குறுவை சாகுபடிக்காக நிலத்தை தயார் செய்து, வானத்தையும் காவிரியையும் நம்பி காத்திருந்த விவசாயிகளின் கனவுகள் கண்ணீரில் கரைந்துள்ளன.
"மழை பெய்யும் காவிரி வரும் வயலில் நாற்று நடலாம்..." என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த விவசாயிகளுக்கு, வறண்ட ஆற்றுப்படுகை மட்டுமே பதிலாக கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved