Also Watch
Read this
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே வங்க கடலில் 425 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கான விண்ணப்பத்தை ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் சமர்பித்துள்ள நிலையில், கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அத்திட்டம் மதிப்பிடவே முடியாத அளவில் சுற்றுச்சுழல் பாதிப்பை உண்டாக்கும் என்ற அபாயம் நிலவும் நிலையில் அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் மோசமாகும்...
ஹைட்ரோ கார்பன் என்பது பூமிக்கடியில் உள்ள கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகும். அதாவது பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, நாஃப்தா, ஷேல் எரிவாயு போன்றவற்றின் ஒட்டுமொத்த வடிவமே ஹைட்ரோ கார்பன்கள். இந்த ஹைட்ரா கார்பன் புதைந்திருக்கும் இடத்தில் பல ஆயிரம் அடி துளையிட்டு எரிபொருட்களை பிரித்து எடுப்பது அத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினால் மதிப்பிடவே முடியாத அளவுக்கு சுற்றுச்சூழல் மோசமாகும் என்பதாலே கடும் எதிர்ப்புகள் புடைசூழ்ந்து நிற்கின்றன. கடல் மற்றும் நிலப்பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை தனியார் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், அந்த ஆழ்துளை கிணறுகளால் கடலில் வெப்பம் அதிகமாகி கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்க நேரிடும். அதோடு அந்த கிணறுகள் அமைந்திருக்கும் சுற்றியுள்ள நிலங்கள் உப்புத் தன்மையுடன் மாறிவிடும். இந்நிலையில் கடலை நம்பியே வாழும் மீனவர்களின் நிலைமையும், சுற்றுச்சுழல் நிலைமையும் கேள்வி குறி தான்.

கடலூர், பரங்கிப்பேட்டை அருகே...
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் கடந்த 2006ஆம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து பணிகளை தொடங்கிய நிலையில், சுற்றுவட்டார மக்கள் போர்க் கொடியை உயர்த்தியதால் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலை இருக்க கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், வங்க கடலில் புதிதாக நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளரேஷன் நிறுவனம் தமிழ்நாடு கடற்கரையோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பத்தை சமர்பித்துள்ள நிலையில், மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அலையாத்தி காடு அழியும்
ஏற்கெனவே ஹிந்துஸ்தான் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிணறுகளில் வளம் குறைந்து வருவதாலேயே, மீண்டும் புதிய கிணறுகள் அமைப்பதற்கான முயற்சியில் அந்நிறுவனம் இறங்கி உள்ளது. எண்ணெய் கிணறு அமைப்பதால் ரசாயனம் மற்றும் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலின் சூழலே முற்றிலும் மாறிவிடுவதோடு, மீன்வளம் இல்லாத பகுதியாகவே மாறும் சூழல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் கடல் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினால் லட்சக்கணக்கான மீனவர்கள் பாதிப்படைவார்கள். மேலும் கண்ணில் புலப்படாத பல உயிரினங்கள் அழிந்துவிடும். அந்த கிணறுகளால் அருகிலுள்ள அலையாத்தி காடு அழியும் நிலைமையும் உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது.

அனுமதி அளிக்க கூடாது
இத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி விட்டால், மத்திய அரசு எளிதில் அனுமதியை கொடுத்துவிடும் என்பதால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி பல நாடுகள் செல்லும் நிலையில், சுற்றுச்சுழலை மோசமாக்கும் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்தியா செயல்படுத்த முற்படுவதாக எதிர்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில் கடல்வாழ் உயிரினங்களையும், சூற்றுச்சூழலையும் சர்வ நாசமாகி விட்டு மீனவர்களையும் நிற்கதியில் நிற்கும் வைக்கும் விதமாக மாநில அரசு அனுமதி அளிக்க கூடாது என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved