Also Watch
Read this
பிரான்சில் டிரம்பை சந்திக்கும்போது பிரதமர் மோடி தனது எதிர்ப்பை பதிவு செய்வாரா?
இந்திய மாலுமிகள் பலி
ஓமன் கடற்கரைக்கு அப்பால் ஒரு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர். ஓமான் வளைகுடாவைக் கடந்து சென்றுகொண்டிருந்த பலாவ் நாட்டு கொடி தாங்கிய எம்/டி செட்டெபெல்லோ (M/T Settebello) என்ற கப்பலை, சென்ட்காம் எனப்படும் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தாக்கி செயலிழக்கச் செய்தது. வர்த்தக எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தது, இந்தியாவில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த அதிருப்தியான சூழல் மாறுவதற்குள் மேலும் புதிய உரசலை ஏற்படுத்தியுள்ளது.

முதல் தாக்குதல்...
மத்திய அரசின் தகவல்படி, ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற மூன்று வெவ்வேறு வர்த்தகக் கப்பல்கள் கடந்த வாரம் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்கக் கடற்படையால் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறினார். முதலாவதாக, 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற பலாவ் நாட்டு கொடி தாங்கிய (Palau-flagged) 'மாரிவெக்ஸ்' (Marivex) என்ற எண்ணெய்க் கப்பல், ஜூன் 8ஆம் தேதி அன்று அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டு செயலிழந்தது. இருப்பினும், அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சடலங்களாக 3 மாலுமிகள்
இரண்டாவதாக கினியா-பிசாவ் (Guinea-Bissau) நாட்டுக் கொடியுடன், 20 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற 'ஜல்வீர்' (Jalveer) என்ற கப்பல் வியாழக்கிழமை தாக்கப்பட்டது. செட்டெபெல்லோ (Settebello) என்ற பெயருடைய, பலாவ் நாட்டு கொடி தாங்கிய மற்றொரு எண்ணெய் கப்பல் ஜூன் 10ஆம் தேதி அன்று தாக்கப்பட்டது. அதில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் மூவர் உயிரிழந்தனர். புதன்கிழமை காலை, ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற எம்/டி செட்டபெல்லோ கப்பல் ஓமன் கடலைக் கடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு அமெரிக்க விமானம் அதன் இயந்திர அறைக்குள் துல்லியமான குண்டுகளை வீசியது. இதனால் தீ விபத்து ஏற்பட்டு, வானில் புகை மண்டலமாகப் பரவியதுடன், ஒரு பெரிய மீட்பு நடவடிக்கையும் தொடங்கப்பட்டது. பலாவ் கொடி ஏற்றப்பட்ட கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மூன்று மாலுமிகளும் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

அமெரிக்க ராணுவம்...
ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியா சம்மந்தப்படாத ஒரு போரில் இந்திய குடிமக்களின் உயிரிழப்பு என்பது இருதரப்பு உறவில் ஆழ்ந்த கவலைகளை எழுப்பியுள்ளது. ஆனால், அமெரிக்கப் படைகளின் அறிவுறுத்தல்களுக்கு கப்பல் பணிக் குழுவினர் மீண்டும் மீண்டும் இணங்கத் தவறியதாலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

எதிர்ப்பை பதிவு செய்த இந்தியா
ஈரான் மற்றும் ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் தொடர்பான தடைகளை அமல்படுத்துவதற்காக OFAC என்ற அமைப்பை அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்க கருவூலத்தின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் என்று குறிப்பிடப்படும் OFACயால் தடை விதிக்கப்பட்டிருந்த 2 கப்பல்களே தாக்கப்பட்டதாகவும், மற்றொரு கப்பல் விதிமுறைகளை மீறியது என வகைப்படுத்தப்பட்டிருந்தது என்றும் அமெரிக்க தரப்பு கூறுகிறது.
ஆனால், மத்திய அரசு இரண்டு நாட்களில் இருமுறை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகப் பொறுப்பாளரை வரவழைத்ததுடன், பொதுமக்கள் கப்பல் போக்குவரத்திற்கு எதிராக lethal and deadly force பயன்படுத்துவதற்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்தது.

இந்தியா எச்சரிக்கை
அதாவது அமெரிக்கப் பொறுப்பு தூதர் ஜேசன் மீக்ஸை (U.S. Chargé d'Affaires Jason Meeks) வரவழைத்து, ஓமன் வளைகுடாவில் இந்திய மாலுமிகளை ஏற்றிச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை நடத்தும் தொடர் தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சகம் தனது எதிர்ப்பை பதிவு செய்தது. தவிர்த்திருக்கக் கூடிய துயரமான உயிரிழப்பிற்கு கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மேலும், பொது மக்கள் கப்பல் போக்குவரத்திற்கு எதிராக lethal and deadly force பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதோடு, இத்தகைய நடவடிக்கைகள் ஒரு பதற்றமான பகுதியில் சர்வதேச கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பை சீர்குலைக்கின்றன என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் குரல்
அமெரிக்கா உடனான உறவு ஏற்கெனவே தள்ளாடும் நிலையில் இந்த விவகாரம் ஏற்கெனவே ஒரு எரிச்சலூட்டும் விஷயமாக மாறியுள்ளது. இந்தியர்களின் உயிரிழப்புகள், உள்நாட்டில் பொதுமக்களின் சீற்றமாக வெளிப்பட்டால் இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்துவது மோடி அரசுக்கு மேலும் கடினமாக்கக் கூடும். இந்த பின்னணியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குச் சில நாட்களுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு உரசல் ஏற்பட்டுள்ளது. இந்திய மாலுமிகள் உயிரிழப்பு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்காத மோடி, இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் என சில எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன.

மாலுமிகள் இடையே அச்சம்
"சர்வதேச கடல் பகுதியில் வெளிநாட்டு ராணுவம் இந்தியத் தொழிலாளர்களைக் கொல்லும்போது, இந்திய அரசு உறுதியாக குரல் எழுப்ப வேண்டும்," என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்திய வணிகக் கப்பல் தொழிலாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மாலுமிகள் இந்தியாவில் இருந்து சென்று பணிபுரிகின்றனர். அவர்களில் பலர், பதற்றமான பகுதிகளில் வெளிநாட்டுக் கொடி தாங்கிய கப்பல்களில் பணிபுரிவதால், உயிருக்கு உத்தரவாதமற்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். எனவே சமீபத்திய தாக்குதல்கள் இந்திய மாலுமிகளிடையே “பீதியையும் அச்சத்தையும்” ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் சாடல்
இந்த மரணங்களை, மோடியின் ராஜதந்திர செல்வாக்கிற்கான சரிவு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சித்தரிக்கின்றன. "அதிபர் டிரம்புடன் தனக்குள்ள தனிப்பட்ட நல்லுறவை ஒரு ராஜதந்திர சாதனையாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திய பிரதமர், அந்த உறவு இந்திய உயிர்களைப் பாதுகாக்கத் தவறும் போது, பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது," என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

அரசியல், பொருளாதார நெருக்கடி
குவாட் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்களான இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே, ஒரு காலத்தில் வலுவாக இருந்த உறவுகள், கடந்த ஓராண்டில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மோசமடைந்துள்ளன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாகக் திரும்பத் திரும்ப கூறி வருவது, இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த கடுமையான வரிகள் இதற்குக் காரணமாக அமைந்துவிட்டன.

பிரதமர் நினைவூட்டுவாரா?
பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் “வளர்ந்து வரும் உறவுகள்” இந்த உரசல் மேலும் அதிகரிப்பதற்குக் காரணமாகியுள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கு ஒரு தூதரை நியமித்ததன் மூலமும், கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்தியப் பயணம் மூலமும் டெல்லியுடனான உறவுகளைச் சீர்செய்ய வாஷிங்டன் முயன்றுள்ளது. ஆனால், அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழந்தது இந்த முயற்சிக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளது. ஈரான் தாக்கியதாக பொய் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயன்ற டிரம்பின் தந்திரமும் எடுபடவில்லை. அமெரிக்காவுடன் இந்தியா நான்கு அடிப்படை ராணுவ ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தங்களின் சாராம்சத்தைக் கடைப்பிடிக்க இரு தரப்பினருக்கும் பொறுப்பு தேவை என்பதை மோடி டிரம்பிடம் நினைவூட்டுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved