Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வட தலைக்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பலர் நெல் நடவு செய்துள்ளனர்.
தற்போது இன்னும் ஒருமாதத்தில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் கருகி வருகின்றன. வயல் பகுதிகள் வெடித்து விரிசல் ஏற்பட்டுள்ளன. பாசனத்திற்கு தண்ணீர் தரும் வாலாஜா ஏரி தூர்ந்து போய் உள்ளதால் தங்களுக்கு 40 ஆண்டு காலமாக கிடைத்து வந்த தண்ணீர் தற்போது கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இப்பகுதி முழுக்க முழுக்க வாலாஜா ஏரி பாசனத்தை நம்பிய உள்ள பகுதிகளாகும் என குறிப்பிடும் விவசாயிகள் வாலாஜா ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வாரி தர வேண்டும்
தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிடும் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கருகிய பயிர்களை கண்டு கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
முக்கியமாக வாலாஜா ஏரிக்கு நெய்வேலி என்எல்சி சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வருவதால் அந்த தண்ணீரில் அடித்து வரப்படும் மண் துகள்கள் நீண்ட காலமாகவே அவை ஏரிக்குள்ளேயும், ஏரி தண்ணீர் பாசன வாய்க்கால்களுக்கு செல்லும்போது வாய்க்கால்களின் அடியில் தங்கி கொண்டு அடிக்கடி தூர்ந்து போய் விடுகிறது.

இதனை மூன்று மாதத்திற்கு ஒரு முறை முறையாக வாய்க்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால் வயல்களுக்கு பாசனத்துக்கு தடை இல்லாமல் தண்ணீர் கிடைக்கும் என
தெரிவிக்கின்றனர். தற்போது அதிகாரிகள் தங்களை எட்டி கூட பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.
உடனடியாக தங்களது வயல்களை ஆய்வு செய்து நிவாரணத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்தும், ஏரியும் பாசன வாய்க்காலையும் தொடர்ந்து தூர்வாரி பராமரித்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இன்னும் இரண்டு தினங்களில் காய்ந்து போன வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சவில்லை எனில் வயல்களில் கால்நடைகளை விட்டு மேய்ப்பதை தவிர வேறு வழியே இல்லை எனவும்
அவர்கள் வேதனையோடு குறிப்பிட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved