கிடங்குக்கு எடுத்து செல்வதில் சுணக்கம் : ராஜபாளையம் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மூடைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அயன் கொல்லங் கொண்டானில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சோலைசேரி, நக்கனேரி, ஜமீன் கொல்லங்கொண்டான் உள்ளிட்ட 8 கிராமங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் சுமார் இரண்டாயிரம் நெல் மூடைகள் கட்டி வைக்கப்பட்டு அதே இடத்தில் உள்ளது. இதனை அடுத்து கொண்டு வரப்பட்ட சுமார் 30 ஏக்கரில் விளைந்த நெல் மணிகள் அந்தப் பகுதி முழுவதும் குவியலாக தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டி வைக்கப்பட்ட நெல் மூடைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மேற்கொண்டு வரும் நெல் மணிகளை கொட்டி வைக்க இடமில்லாத காரணத்தால் தற்போது அறுவடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இரவில் பெய்து வரும் மழை காரணமாக நெற்களத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூடைகள் நெல் மணிகள் நனைந்து வீணாகி வருகிறது. கடந்த வருடம் இரண்டு இயந்திரங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு இயந்திரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து மழை பெய்தால் நெல் மணிகள் முளைத்து வீணாகிவிடும் என்பதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகளை உடனுக்குடன் அங்கிருந்து கிட்டங்கிக்கு எடுத்துச் செல்லவும், கூடுதல் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தேங்கியுள்ள நெல் குவியல்களை தாமதம் இன்றி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து